திங்கள், 24 மே, 2010

'முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிய அளவில் காடு அழிக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக

பெரிய அளவில் காடு அழிக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக ஸ்ரீலங்கா நேச்சர் ஃபோரம் அனுப்பிய படம்
இலங்கையில் சுமார் 4000 ஏக்கர் வனப் பகுதி அரசால் கையகப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொக்கிளாய் பகுதியில் இருக்கும் இந்த வனப் பரப்பு மக்களின் மீள்குடியேற்றத்துக்காக என்றும் கூறப்படுகிறது.

அங்கு சென்று வந்த ஸ்ரீலங்கா நேச்சர் ஃபோரம் எனும் அமைப்பினரும் இப்படியாக காட்டு நிலம் கையகப்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களும் பிபிசிக்கு கிடைத்துள்ளன.

இந்நிலையில் இப்படியான ஒரு குறுகிய நிலப்பரப்பில் சுமார் 4000 ஏக்கர்கள் காடுகள் அழிக்கப்படுவது இலங்கையின் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டாகடர் தங்கமுத்து ஜெயசிங்கம் கூறுகிறார்.
கொக்கிலாய் வனப் பகுதியில் அரசாங்கம் வைத்துள்ள அறிவிப்பு பதாதை
அடர்ந்த காடுகள் உள்ள பிரதேசத்தில், குறிப்பாக கொக்கிளாய் வாவியை அண்டிய பிரதேசத்தில் இப்படியாக காட்டு நிலங்கள் அழிக்கப்படுமாயின் அது பல்வகைகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

மரங்கள் அழிக்கப்படுவதற்கு அப்பால், அடுத்து வரும் மழையால் வெள்ளத்துடன் பெருமளவு மண் அரிப்பும் ஏற்பட்டு நிலத்தை பாதிக்கப்படும் என்று கூறும் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், அரிக்கப்படும் மணல் கொக்கிளாய் வாவியில் சென்றடையும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கிறார்.

இது எதிர்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எனவும் கருத்து வெளியிடுகிறார்.

மேலும் இவ்வளவு பெரிய காடழிப்பு நடைபெறும்போது, ஒரு சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து வெளியிட வேண்டியது இலங்கையில் சட்டபூர்வமான ஒரு தேவை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கிழக்கு பல்கலைகழகத்தின் தாவரவியல் பேராசிரியருமான டாக்டர் தங்கமுத்து ஜெயசிங்கம் சுட்டிக்காட்டுகிறார்.

கருத்துகள் இல்லை: