வெள்ளி, 28 மே, 2010

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா,டிரினிடாட்ருபாக்கோ நாட்டின் முதலாவது பெண் பிரதமராக

டிரினிடாட்ருபாக்கோ நாட்டின் முதலாவது பெண் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா பேர்சாட் பைஸ்செசர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கம்லா தலைமையிலான அரசியல் கூட்டணி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது. ஆளும் கட்சியின் 43 வருடகால அதிகாரம் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

41 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்கம்லாவின் மக்கள் பங்குடமைக் கட்சி தலைமையிலான கூட்டணி 29 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. தேர்தல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ஜோர்ஜ் மைக்சல் ரிட்சாட்ஸ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கம்லா பிரதமராகப் பதவியேற்கவிருந்தார்.
கம்லாவுக்கு இரு பேரக் குழந்தைகள் உள்ளனர். அவர் தீவிர இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவராவார். பெண்கள் மற்றும் பெண்களின் அமைப்புகளிடமிருந்து எனக்கு அதிகளவிலான ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பெண்கள் எதிர்நோக்கும் பல தடைகளை என்னால் உடைத்து முன்னேற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றி பெண்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதனைக் கொண்டாட இருப்பதாகவும் கம்லா கூறியுள்ளார்.
2002 இலிருந்து டிரினிடாட்டின் பிரதமராக இருந்து வந்த பற்றிக் மானிங் தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கம்லா சட்டக் கல்லூரியில் பயின்றதுடன், வர்த்தக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அத்துடன், மேற்கு இந்தியத் தீவுப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்றவராகும். அத்துடன் அந்த நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும் சட்ட விவகார கல்வித் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.
1845-1917 க்கும் இடையில் கம்லாவின் மூதாதையர் அங்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். 1 இலட்சத்து 48 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்களின் ஒருவராக கம்லாவின் மூதாதையர் அங்கு சென்றிருந்தனர். கரும்பு, கொக்கோ பயிர்ச் செய்கையில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 13 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட ட்ரினிடாட், டுபாக்கோவில் புலம்பெயர்ந்த இந்திய சமூகம் 44 சதவீதமாகும்.

கருத்துகள் இல்லை: