ஞாயிறு, 2 மே, 2021

ஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!

minnambalam : சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 156 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. சில தொகுதிகளின் முடிவுகளே இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தின் உயர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் முதலே சென்னை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு பொக்கேக்களோடு சென்று அவரை வாழ்த்தத் தொடங்கிவிட்டனர்.

முன்னாள் ஐஜி சந்திரசேகர், முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஒருபக்கம் என்றால்... இன்னொரு பக்கம் தற்போது பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு பொக்கேக்களோடு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகளில் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி சங்கர் ஜியால் ஐபிஎஸ், டிஜிபி ரேங்க்கில் இருக்கும் கந்தசாமி, வருண் குமார் ஐபிஎஸ், ஐஜி சாரங்கன், டிஜிபி ரேங்க்கில் இருக்கும் ஷகில் அக்தர் ஐபிஎஸ், ஐஜி பிரமோத்குமார், டிஜிபி ரேங்க் கரன் சிங், டிஜிபி ரேங்க் சைலேந்திரபாபு ஐபிஎஸ், ஏடிஜிபி ரேங்க் மஞ்சுநாத் உள்ளிட்டோர் ஸ்டாலினை சென்று சந்தித்து அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

ஐஏஎஸ் அதிகாரிகளில் இன்று மாலை ஆறு மணிக்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மலர்க்கொத்தோடு ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். மேலும் இப்போதைய ஆட்சியின் உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பத்திரப் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதுல்ய மிஸ்ரா, கார்த்திகேயன், சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்.

தங்களின் பதவிகளைக் காப்பாற்றுவது, புதிய பதவிகளை அடைவது, மனப்பூர்வமாக வாழ்த்துவது என்று கலவையான நோக்கங்களுடன் அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டை சூழ்ந்துள்ளனர். ஸ்டாலின் வீட்டு வாசலிலும், அந்த ஏரியாவிலும் போலீஸார் வாகனங்களை

ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-வணங்காமுடி வேந்தன்

கருத்துகள் இல்லை: