சனி, 8 மே, 2021

மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ - உடனடி அரசாணை... தயாராகும் பேருந்துகள் : மகிழ்ச்சியில் பெண்கள்!

கலைஞர் செய்தி : தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் பெருவெற்றிக்குப் பிறகு இன்று முதல்வராகப் பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4,000 என்றும் முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2,000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் நாளை முதல் பயணம் செய்ய வகை செய்யும் கோப்பிலும் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி தமிழ்நாடு அரசு ஈடுகட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையையும் இன்றே வெளியிட்டது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பேருந்துகளில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ எனக் குறிப்பிட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டு, அடுத்த நாளே பயன்பாட்டுக்கு வரும் இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கருத்துகள் இல்லை: