சனி, 8 மே, 2021

வங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தியாவையே கிட்டதட்ட அழித்துவிட்டது'.. மம்தா!

 Vigneshkumar - /tamil.oneindia.com  : கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில், பாஜக அரசு இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அழிவின் விளிம்பிற்கு எடுத்துச் சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததுள்ளது.
அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், அங்குச் சட்டசபை சபாநாயகராக திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிமான் பாண்டியோபாத்யாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது சட்டசபையிலேயே மம்தா, பாஜகவை மிகக் கடுமையாகச் சாடினார்
சட்டசபையில் பேசிய மம்தா, மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை தூண்ட முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி தோல்வியடைந்த பாஜக. போலி செய்திகள் மூலம் வன்முறையைத் தூண்ட முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.



மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு நேரடியாகத் தேர்தல் ஆணையம் உதவியதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் தேர்தல் கமிஷனின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் பாஜகவால் 30 தொகுதிகளைக் கூட தாண்டியிருக்க முடியாது என்றும் தேர்தல் கமிஷின் கண்காணிப்பில் இருக்கும் பல இடங்களில் மோசடி நடைபெற்றதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தில் தற்போது உடனடியாக சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்

தொடர்ந்து பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில், அவர்கள் இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாகவே மத்திய அரசு எந்தவொரு வேலையையும் செய்யவில்லை. வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என இங்கு முகாமிட்டிருந்தனர். இருப்பினும், அவர்களால் இங்கு ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை" என்றார்

நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அவை பரவ தொடங்கியபோதும், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றன. பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, திரிணாமுல் தலைவர் மம்தா என கிட்டதட்ட அனைத்து தலைவர்களும் மாஸ்க்குகளை அணியாமலேயே பிரசாரம் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரே முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்தனர்.

கருத்துகள் இல்லை: