திங்கள், 3 மே, 2021

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட "வெயிட்டிங்கும்".. 10 "சக்ஸஸ்களும்".. தனிப்பெரும் தலைவரானார்..!

May be an image of 1 person

Hemavandhana  - /tamil.oneindia.com : சென்னை: இது எதிர்பார்த்த ரிசல்ட் என்றாலும், திமுக வரலாற்றில் வைரத்தால் சூட்டப்படும் இன்னொரு மணிமகுடம் ஆகும்..
இந்த வைர கிரீடத்துக்கு சொந்தக்காரர் முக.ஸ்டாலின்..!
10 வருடமாக ஆட்சியில் இல்லை திமுக..சென்ற முறை 1.1 சதவிகித வாக்கு சதவீதத்தை நூலிழையில் தவறவிட்டது..
அந்த கடைசி ஒரு வாரம் ஒருசில தொகுதிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது..
64 ஓட்டுகளில் இருந்து 2000 ஓட்டுகளுக்கு திமுக கூட்டணி 28 இடங்களில் தோல்வியை தழுவியது ஜீரணிக்க முடியாத ஒன்று.
ஆனால், இந்த 5 வருடம் அதிமுக ஆட்சிதான் திமுகவுக்கு பிளஸ் ஆக அமைந்துவிட்டது..
நீட் தேர்வு அமல்படுத்தியதன் விளைவு,
முதல் தலைமுறை வாக்காளர்கள் அதாவது கிராமத்து இளைஞர்கள் அப்படியே அதிமுகவுக்கு எதிராக திரும்பியதுதான் திமுகவின் முதல் சக்சஸ்!

பாஜக பாஜக ஆளும் தரப்பு மீதான அதிருப்தியும், பாஜக மீதான உச்சக்கட்ட கோபமும், திமுகவுக்கு சாதகமான சூழலை பெற்று தந்தது.
அதிலும், லேடியா? மோடியா சவால் விட்ட கட்சியே இன்று, பாஜகவிடம் சரணடைந்ததை அதிமுக தொண்டர்களே ஏற்று கொள்ளவில்லை..
இதுவும் திமுகவின் இரண்டாவது சக்சஸ்..!


அத்தனை கோடி ரூபாயில் படேல் சிலையை கட்டிவிட்டு, கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமை, 20 ஆயிரம் கோடிக்கு புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டம், பிரதமருக்கு 2000 கோடியில் சொகுசு விமானம் வாங்க இருப்பது,
விவசாயிகளுக்கு எதிரான கொள்முதல் திட்டம், 6 மாதமாக டெல்லியில் செத்து மடியும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது, இப்படி எத்தனையோ விஷயங்களில் அதிமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் திரும்ப காரணமாக இருந்திருக்கின்றன..
இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கை திமுகவின் மூன்றாவது சக்சஸ்..
இலவசங்களை தந்து இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும், செயல்திட்டமும், நடைமுறை யதார்த்தமும் மட்டுமே மக்களிடம் எடுபடும் என்பதையும் திமுக உணர்ந்து கொண்டது..
இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை மீது மக்களின் நம்பகத்தன்மை அதிகமாகியது.

அதேபோல, பணத்தை வாரி இறைத்தால் வாக்குகள் எகிறிவிடும் என்ற வழக்கமான தேர்தல் கணக்கை, உடைத்தெறிந்தது திமுகதான்..
இதுதான் திமுகவின் நான்காவது சக்ஸஸ்..
சில அமைச்சர்கள், பணத்தை மட்டுமே கடைசி வரை நம்பி கொண்டிருந்தார்கள்..
அதற்காகவே தங்கள் தொகுதியைவிட்டு வேறு யாருக்கும் பிரச்சாரமும் செய்யாமல் விநியோகத்திலேயே கவனம் செலுத்தினர்..
ஆனால், திமுகவோ, தன்னை நம்பியது.. தன்னை நம்பும் மக்களை முழுமையாக நம்பியது.

அனைத்து பிரச்சாரங்களிலும் மாநில உரிமைகள் குறித்த விஷயத்தை திமுக முன்னெடுத்தது..
இதுதான் திமுகவின் ஐந்தாவது சக்ஸஸ் ஆகும்..
வேறு எந்த கட்சிகளும் மாநில உரிமை குறித்த பேச்சை எடுக்கவில்லை..
ஒருவர் மீது ஒருவர் குறைகளை, அள்ளி பூசினார்களே தவிர, மாநில உரிமைகள் குறித்த விஷயங்களை பேசி, பாஜகவை திணற வைத்து திமுகதான்.

அ ம மு க அதிமுக பலவீனமான கூட்டணியைவிட, திமுகவின் பலமான கூட்டணியே ஸ்டாலினுக்கு ஆறாவது சக்ஸஸ் ஆகும்..
வெளியில் இருக்கும் அமமுகவை உள்ளே இழுத்து போடாமல், உள்ளே இருக்கும் தேமுதிகவையும் வெளியே தூக்கி போட்டார் எடப்பாடி பழனிசாமி..
ஆனால், ஸ்டாலினோ, தன் கூட்டணியில் இருந்து ஒருத்தரையும் விட்டுவிடவில்லை..
அத்துடன் புது கட்சிகளையும் இணைத்து கூட்டணியை விஸ்தரித்ததும் திமுகவுக்கு பலம் தந்துள்ளது.

அதேபோல அதிமுகவின் வேட்பாளர்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் சாய்ஸ்படியே எடப்பாடியார் அறிவித்தார்..
ஆனால் ஸ்டாலின் அப்படியில்லை.. எந்த அமைச்சரை எதிர்க்க யார் சரியான நபர் என்பதை தேர்ந்தெடுத்து, அதிமுக வேட்பாளரை நகர விடாமல் செக் வைத்ததே திமுகவின் ஏழாவது சக்ஸஸ் ஆகும்..
இது ஒரு பெரிய ராஜதந்திரம்... அத்துடன், மண்டலம் வாரியாகவும் தொகுதி வாரியாகவும் திமுகவினரை பொறுப்பாளராக நியமித்தது அதைவிட சூப்பர்.

அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு எல்லாம் வாய்ப்பு தந்தால் எப்படி? என்று கேட்டார்கள்..
ஆனால், உதயநிதிக்கு சீட் தேவையா என்றும் விமர்சித்தார்கள்.. சீனியர்களுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றார்கள், ஆனால் துரைமுருகனுக்கு சீட் தந்தால் அதையும் விமர்சித்தார்கள்..
இப்படி அனைத்து விமர்சனங்களையும் கடந்து சீனியர்கள் + ஜூனியர்கள் என இரு தரப்பையும் சரிசமமாக பேலன்ஸ் செய்துள்ளார் ஸ்டாலின்.

கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு அபாரமாக கிடைத்துள்ளது திமுகவுக்கு.. இதை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்..
அதிலும் திருமாவளவனின் பிரச்சாரம் இந்த முறை பெரிதும் கை கொடுத்துள்ளது.. தன்னுடைய ஒவ்வொரு பிரச்சாரங்களிலும் பாஜகவை குறி வைத்து அட்டாக் செய்தார் திருமா..

விசிக தலைவர்களின் பிரச்சாரம், விசிக வேட்பாளர்களுக்கு உதவுவதைவிட திமுக வெற்றிக்கு உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது..
அந்த வகையில் ஸ்டாலினுக்கு இது எட்டாவது சக்ஸஸ்..!

திமுகவிலேயே கனிமொழியின் பங்கு அபரிமிதமானது.. எளிமையான அணுகுமுறையுடன் தென்மாவட்டங்களில் கனிமொழி எடுத்து வைத்த பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் திமுகவுக்கு செல்வாக்கை கூட்டியது..
செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்று அண்ணாமலை சொன்னதுமே, தைரியம் இருந்தால் அவரை தொட்டுப்பார் என்று கனிமொழி சீறியதை கண்டு பாஜகவே மிரண்டு போனது.

அதேபோலதான் உதயநிதியும்.. இவர் என்ன பேச போகிறார் என்று ஏளனமாக நினைத்தவர்கள் மத்தியில், ஒரே ஒரு செங்கல்லை தூக்கி காட்டி, பாஜகவையே தலைதெறிக்க ஓட வைத்துவிட்டார்.
இது ஸ்டாலினின் ஒன்பதாவது சக்ஸஸ்..!
இறுதியாக, திமுகவின் வெற்றிக்கு ஸ்டாலினின் உழைப்பு பாராட்டத்தக்கது..
தனக்கு வந்துள்ள பொறுப்பு மிக முக்கியமானது என்பதையும், இந்த தேர்தலை விட்டால் திமுக தன் வலிமையை இழந்துவிடும் என்ற அபாயத்தையும் ஸ்டாலின் உணராமல் இல்லை..

அதனாலேயே கடுமையான பிரச்சாரத்தை கையில் எடுத்தார்.. காலையில் ஒரு ஊர் என்றால் சாயங்காலம் வேறு ஒரு தொகுதி என்று றெக்கை கட்டி பறந்தார்.. ஸ்டாலினின் வேகத்துக்கு மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களும் இணைந்து பணியாற்றியது பாராட்ட தகுந்தது. அன்று கருணாநிதியே சந்திக்காத எத்தனையோ, எதிர்ப்புகளை ஸ்டாலின் சந்தித்து முறியடித்து, தன்னை தனிப்பெரும் தலைவராக நிரூபித்துள்ளார் கலைஞரின்  மகன் முக ஸ்டாலின்...

கருத்துகள் இல்லை: