ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

நீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு அதிகாரிகள் தகவல்

tamil.news18.com : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் உயர் அதிகாரிகள், காணொளி காட்சி வாயிலாக பல்வேறு மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளோடு இன்று காலை 11 மணி முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும் , அந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது அதேபோன்று இட ஒதுக்கீடு கொள்கையை எந்தவகையிலும் மாற்றிக்கொள்ள முடியாது என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்த முழுமையான எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் உயர் அதிகாரிகள், காணொளி காட்சி வாயிலாக பல்வேறு மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளோடு இன்று காலை 11 மணி முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

நீட் தேர்வு தொடர்பாகவும், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் மத்திய அமைச்சர், அந்தந்த மாநில அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். தமிழகத்தின் சார்பாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு , மாணவர் சேர்க்கை செயலாளர் மலர் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நீட் தேர்வை ஏற்க முடியாது, அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஏற்கனவே எந்த நடைமுறை அமலில் இருக்கிறதோ அதே நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: