வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கும்பமேளா நிகழ்ச்சியில் ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு.. நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவால் உயிரிழந்தார்

May be an image of 4 people, people standing and text that says 'oneindia tami 2.9M Followers பாலோயிங் கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு! 16 16Apr21. Apr 21 5:57 AM'

tamil.oneindia.com :உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவமாடுகிறது. கும்பமேளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவைவிட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனிதமான நாட்களில் ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காகவே கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரே நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடுவர்.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருந்த நிலையில் 3 மாதங்கள் நடைபெற வேண்டிய கும்பமேளா நிகழ்வுகள் 2 மாதங்களாக குறைக்கப்பட்டன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஹரித்வார் நகரில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் அலை அலையாக அணி திரண்டனர்.
இப்படி பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்ததால் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதனையும் உத்தரகாண்ட் மாநில அரசால் கடைபிடிக்க முடியவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்ட காரணத்தால் இப்போது ஹரித்வார் புனித நகரமே பெரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது.
இது தொடர்பாக்க முன்னர் கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார் என்றார். ஆனால் இப்போது வட இந்திய இந்துக்களால் கடவுள்களின் அம்சங்களாக போற்றப்படுகிற சாதுக்களின் தலைவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர்.
ஹரித்வாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் (மகாமண்டலேஸ்வர்) கபில் தேவ் தாஸ் (65) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கபில்தேவ் தாஸ் சிகிச்சை பலனின்றி காலமானர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாதுக்கள் கும்பமேளாவை கைவிட்டு விட்டு தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி உள்ளனர்

கருத்துகள் இல்லை: