சனி, 17 ஏப்ரல், 2021

பதிவான ஓட்டு விவரங்களில் குளறுபடி... மறு ஓட்டுப்பதிவு நடத்த தங்க தமிழ்ச்செல்வன் மனு!

nakkheeran.in - சக்தி ; போடி தொகுதியில், மூன்று ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு விவரங்களில் குளறுபடி நடந்துள்ளது, 17C படிவம் மூலம் தெரிய வந்தள்ளது. அதனால் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என போடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியான கிருஷ்ணன் உன்னியிடம் மனு அளித்துள்ளார்.... அந்த மனுவில் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது, “போடியில் 57ஏ சிசம் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் 602 ஓட்டுகள் பதிவானது. எனக்கு வழங்கிய 17C படிவத்தில் 583 ஓட்டுகள் என பதிவாகி உள்ளது. இதில் 19 ஓட்டுக்கள் வித்தியாசம் உள்ளது. 197 முத்தையன் செட்டிபட்டி அரசு கள்ளர் பள்ளியில் பதிவான ஓட்டுக்கள் 538. 17C படிவத்தில் 578 என பதிவாகி உள்ளது. இதில் 40 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

 280 சீலையம்பட்டி கம்பர் நடுநிலைப்பள்ளியில் பதிவான ஓட்டு 873. ஆனால், படிவத்தில் 783 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதில் 90 ஓட்டுகள் வித்தியாசம் உள்ளது. இந்த ஓட்டுப்பதிவு குளறுபடிகள் ஊர்ஜிதமானல் போடி தொகுதிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். ஏப்ரல் 14ஆம்தேதி ஓட்டு எண்ணும் மையத்தில் மின்சார தடை ஏற்பட்டது.

 அப்போது, தொடர்ந்து 13 நிமிடங்கள் போடி தொகுதிக்கான அறையின் டிவி மானிட்டர் மட்டும் இயங்கவில்லை. யுபிஎஸ், ஜெனரேட்டர் உதவியுடன் 24 மணி நேரமும் மின்சாரம் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல் மையத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக தனி வழி ஏற்படுத்த வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: