வெள்ளி, 16 ஏப்ரல், 2021

அமைச்சர் பதவி- ஸ்டாலின் ஆலோசனை: துரைமுருகன் அதிர்ச்சி?

அமைச்சர் பதவி- ஸ்டாலின் ஆலோசனை: துரைமுருகன் ஷாக்!

minnambalma : திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று (ஏப்ரல் 14) குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த துரைமுருகனுக்கு அவரது பங்களாவில் திருடர்கள் புகுந்த விஷயம் லேசான அதிர்ச்சியைதான் கொடுத்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் துரைமுருகனுக்கு சொகுசு பங்களா இருக்கிறது. அங்கேதான் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார் துரைமுருகன். சில நாட்களுக்கு முன் அந்த பங்களாவுக்குள் திருடர்கள் நுழைந்தனர். துரைமுருகன் பங்களா என ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் நுழைந்த அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காததால், கையில் கிடைத்த லிப்ஸ்டிக்கை எடுத்து சுவற்றில், ‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’ என்று துரைமுருகனுக்கே நக்கலாக எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே திமுக உயர் மட்ட வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் தகவல் துரைமுருகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக தலைமை அடுத்து அமைக்கவுள்ள ஆட்சியின் அமைச்சர்கள் பட்டியலையும் தயாரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. துரைமுருகனுக்கும் இது தொடர்பான தகவல்கள் காதில் விழுந்திருக்கின்றன. அதைக் கேட்டுதான் அவர் அதிர்ச்சியாகியிருக்கிறார்,

“அதாவது திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் துரைமுருகன் தான் மிகவும் சீனியராக இருப்பார். ஏற்கனவே அவர் கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, சட்டம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். பொதுப்பணித்துறையில் அவர் நிபுணர் என்றே சொல்லலாம். ஆனாலும் தற்போது துரைமுருகனுக்கு வயதாகிவிட்டதால், அவருக்கு பொதுப்பணித்துறை போன்ற பணிச் சுமை மிகுந்த துறையை வழங்கினால் சரியாக இருக்குமா என்று ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். இப்போதைய முதல்வர் எடப்பாடி போல, பொதுப்பணித்துறையை தானே வைத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். சட்டம் அல்லது வேறு ஏதேனும் அதிக பணிச்சுமை அல்லாத ‘லைட்டான’துறையை துரைமுருகனுக்குக் கொடுக்கலாம் என்று ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது” என்பதுதான் துரைமுருகனுக்குக் கிடைத்த தகவல்.

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை பொறுப்பு வகித்த துரைமுருகனிடம் இருந்து அத்துறையை பறித்து சட்டத்துறையை அவரிடம் கொடுத்திருந்தார் கலைஞர் என்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: