செவ்வாய், 26 மே, 2020

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்குத் தடை!

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்குத் தடை!மின்னம்பலம் : கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தாகத் தற்போது பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) தற்காலிகத் தடை விதித்து மே 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.
இந்த மருத்தை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்ட ஓர் ஆய்வை அடுத்து, WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று (மே 25) நடந்த காணொலி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் பெறும் நோயாளிகள் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை விட அதிக விகிதத்தில் இறந்துகொண்டிருப்பதாக புகழ்பெற்ற மருத்துவ இதழ் தி லான்செட் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த முடிவை தி லான்செட் வெளியிட்டிருக்கிறது.
WHOவின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இதுபற்றி தெரிவிக்கையில், “தி லான்செட் இதழில் வெளியான கட்டுரையை அடுத்து ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தின் மீதான மறு ஆய்வுக்கு நாங்கள் தூண்டப்பட்டிருக்கிறோம். இது பல பதிவுகளிலிருந்தும், ஏராளமான நோயாளிகளிடமிருந்தும் செய்யப்பட்ட ஆய்வாகும். அதேநேரம் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் பற்றிய உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டிருக்கும் ஆய்வில் சிக்கல்கலைக் காட்டும் தரவுகளை இதுவரை நாங்கள் பெறவில்லை. ஆனால் லான்செட் கட்டுரை WHO அமைப்பின் ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதால் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார் அவர்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஹைட்ராக்சிக்ளோரோகுயின் பயன்படுத்துமாறு கூறினார். இந்த மருந்துகளை இந்தியா அமெரிக்காவுக்குத் தரவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் எச்சரித்தார். அதன்படியே இந்தியாவும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளைப் பெருமளவில் அமெரிக்காவுக்கு அனுப்பியது. இந்த மருந்துகளை தான் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். அமெரிக்காவின் பயன்பாட்டை அடுத்து இந்த மருந்தை உலகின் பல நாடுகளும் பெருமளவில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன. கொரோனோ வைரஸ் நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயினைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி உலக அளவில் ஏழு முக்கிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: