ஞாயிறு, 21 ஜூலை, 2019

நாடாளுமன்றத்தில் கனிமொழி கடும் விவாதம் ...தேசிய மனித உரிமைகள் திருத்த மசோதா

அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் : இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதுவரை பேசப்பட்ட விஷயங்களில் அனேகமாக இது தான் ரொம்ப ஹெவியான சப்ஜக்ட் என்னைப்பொறுத்தவரை. மற்றவர்கள் கருத்து பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த கூட்டத்தொடரில் நேற்று கொண்டு வரப்பட்ட தேசிய மனித உரிமை ஆணைய திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில் கழக இளந்தலைவர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், பாஜகவின் உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. சத்தியபால் சிங் அவர்கள் பேச்சுக்கு அருமையான பதில் கொடுத்தார். இதோ திரு. சத்யபால் சிங் அவர்கள் பேசியதையும் அதற்கு திருமிகு கனிமொழி எம்.பி அவர்கள் பதிலையும் பாருங்கள்!
சத்யபால் சிங்: `இந்தியர்களை நான் டார்வின் தேற்றப்படி பார்க்கவில்லை. இந்தியர்கள் அனைவரும் ரிஷிகளின் பிள்ளைகள்!
கனிமொழி கருணாநிதி: நான் முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். `நான் ரிஷிகளின் வழியில் வந்தவள் அல்ல. என் மூதாதையர்கள் ரிஷிகள் அல்லர். என் மூதாதையர்கள் ஹோமோசேபியன்ஸ் (மனிதர்களின் அறிவியல் பெயர்) என்கிற அறிவியல் வழி வந்தவர்கள்.

என் பெற்றோர் சூத்திரர்கள்.கடவுளின் எந்தப் பாகத்தில் இருந்தும் பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஏனென்றால் நாங்கள் சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடுபவர்கள். தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம்.
மனித உரிமைகளில் முக்கியமானது நாட்டு மக்களிடையே அறிவியல் மனப்பான்மையைப் பாதுகாத்தல். அறிவியல் மனப்பான்மை பெற்றிருந்தால்தான் மனித உரிமைகளை பாதுகாக்க முடியும். அறிவியல் மனப்பான்மை இல்லாமல் மனித உரிமைகளைப் பாதுகாத்திட முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் யார் யாரை நியமிக்க வேண்டும் என்று அங்கீகாரம் தொடர்பான துணைக்குழு பரிந்துரைகள் மீறப்பட்டிருப்பதாக கருதுகிறேன்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழுத் தலைவர் உள்ளிட்டோரை மனித உரிமை கமிஷனில் உறுப்பினர்களாக்க இந்த மசோதா முயல்கிறது.அதேநேரம் மேற்குறிப்பிட்ட பதவியிலுள்ளோர் இந்த அரசில் மட்டுமல்ல, எந்த அரசிலும் ஆளுங்கட்சியின் அரசியல் செல்வாக்கினால் நியமிக்கப்படுபவர்கள் என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. இத்தகையோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டால் தேசிய மனித உரிமை ஆணையம் எப்படி சுயேச்சையாக இயங்க முடியும்?
இந்த அரசு என்.ஜி.ஓ-க்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருந்தாலும் என்.ஜி.ஓ-க்கள்தான் மனித உரிமைக் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
தலித் உரிமைகளாகட்டும், சிறுபான்மை உரிமைகளாகட்டும், பெண்களின் உரிமைகளாகட்டும் தொண்டு நிறுவனங்களின் பங்கு மகத்தானது. எனவே, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தகுதியான தொண்டு நிறுவனங்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும்.
தலைமை நீதிபதி என்பதில் இருந்து எந்த நீதிபதியையும் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கலாம் என்ற மாறுதலையும் இந்த மசோதா முன்மொழிகிறது.
இது இந்த தலைவர் பதவிக்கான ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பவரை மீண்டும் நியமிப்பது என்பது மனித உரிமையில் நம்பிக்கையுள்ள அனைவருக்குமே மனித உரிமை ஆணையம் மீது சந்தேகத்தையே ஏற்படுத்தும். ஆக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இரண்டாம் முறையாக நியமிக்கப்படுதல் என்பது அரசுடன் மனித உரிமை ஆணையம் சமரசம் செய்துகொள்வதையே எடுத்துக்காட்டுவதாக அமையும்.
தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரே ஒரு உறுப்பினரை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் மட்டுமே ஆணையம் விசாரிக்கும் வழக்குகளுக்கு தீர்வு காண முடியாது. ஒரு நாளைக்கு சுமார் 450 வழக்குகள் மனித உரிமை ஆணையத்தை நோக்கி வருகின்ற நிலையில், லட்சக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், ஒரே ஒரு உறுப்பினரை கூடுதலாக நியமிப்பதால் எந்தத் தீர்வும் தரப்போவதில்லை. மேலும், ஒரு பெண் உறுப்பினரையும் கூடுதலாக சேர்ப்பதாக மசோதா கூறுகிறது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஐம்பது விழுக்காடு பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே மனித உரிமை ஆணையத்துக்குதான் அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டிருந்தன. ஆனால், இப்போதைய திருத்தத்தில், ஆணையத்தின் தலைவருக்குதான் அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாம் மனித உரிமை பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.ஆனால், உலகத்தின் மதிப்பீட்டில் இந்தியா வேறு மாதிரி இருக்கிறது. உலக நாடுகளில் இந்தியா மனித உரிமைகளை மோசமாக மீறும் பட்டியலில் இந்தியா 28-வது இடத்தில் இருக்கிறது. இது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
நாட்டில் கஸ்டடி படுகொலைகள் இரு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-க்குப் பிறகு மத்திய அரசு இதுபற்றிய புள்ளிவிவரங்களை வசதியாக மூடி மறைக்கிறது.
பிரச்னைகளை மூடி மறைப்பதே தீர்வாகிவிடும் என்று இந்த அரசு கருதுகிறது.
சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் நாட்டில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி தினம் தினம் தகவல்கள் வருகின்றன. சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னதற்காக கைது செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.மேலும், மனித உரிமை ஆணையம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்யவோ, விசாரிக்கவோ முடியாது என்ற நிலை இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அர்த்தமற்றது.
இந்த மனித உரிமை திருத்த மசோதா என்பது தேசியமனித உரிமை ஆணையத்தை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் இருக்கிறது. எனவே, இந்த மசோதாவைத் திரும்பப்பெற்று மனித உரிமையை உண்மையிலேயே பாதுகாக்கும் வண்ணம் புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய சபாநாயகர் மூலம் அரசை நான் வலியுறுத்துகிறேன்.
*************
மசோதாவில் கொண்டு வரப்படும் திருத்தங்களை எதிர்த்து வாதிட வேண்டுமெனில் எப்படி என்பதற்கு இந்த பேச்சு ஒரு ஆகச்சிறந்த உதாரணம் என்பேன் நான்! தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் என எல்லோர் சார்பாகவும் வாதிட கலைஞரின் குரல் பாராளுமன்றத்தில் அவரது மகளின் வழியாக.... கலைஞர் வாழ்கின்றார்... கலைஞர் நம்மோடு தான் என்றுமே....
அதன் வீடியோவை இந்த சுட்டியில் சுட்டி பார்க்கவும்.

கருத்துகள் இல்லை: