புதன், 24 ஜூலை, 2019

டொனால்ட் ட்ரம்ப்பிடம் மோடி கோரிக்கை? .. காஷ்மீரில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டும்!

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு மோடி கேட்டார்: டிரம்ப் கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி - மத்திய அரசு விளக்கம்
dailythanthi.com : காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டார் என டிரம்ப் கூறியதையொட்டி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதில் மத்திய அரசு விளக்கம் அளித்தது. புதுடெல்லி,காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பாகிஸ்தானுடனான எல்லா பிரச்சினைகளிலும் மூன்றாவது நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதுதான் இந்தியாவின் உறுதியான நிலை.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், ஜப்பானில் ஒசாகா நகரில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது தன்னை சந்தித்த பிரதமர் மோடி, காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தனது உதவியை நாடியதாக குறிப்பிட்டு இந்தியாவை அதிர வைத்தார்.



அப்போது அவர், “2 வாரங்களுக்கு முன்பாக நான் பிரதமர் மோடியுடன் இருந்தேன். அப்போது இந்த பிரச்சினை (காஷ்மீர்) பற்றி நாங்கள் பேசினோம். அவர் என்னிடம் உண்மையில் இதில் நீங்கள் மத்தியஸ்தராக அல்லது நடுவராக இருக்க விரும்புகிறீர்களா என கேட்டார். எதில் என்று கேட்டேன். அவர் காஷ்மீர் என்று சொன்னார்” என குறிப்பிட்டார்.

இது குறித்த தகவல்கள் வெளியானதும் இந்தியா மறுத்தது. இது தொடர்பாக உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் ஒருபோதும் டிரம்பின் மத்தியஸ்தத்தை பிரதமர் மோடி நாடியது இல்லை என கூறியது.

இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று பெரும் புயலைக்கிளப்பியது. அமளிக்கு வழிவகுத்தது. மக்களவை கூடியதுமே காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக போர்க்கோலம் பூண்டனர்; கோஷங்களை முழங்கினர்.

பின்னர் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி எழுப்பினார். அவர், “டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து மிக முக்கியமானது. இதில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என குரல் கொடுத்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத் ராய், “டிரம்பின் கருத்து, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக உள்ளது” என சாடினார்.

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு, “வெளியுறவு கொள்கை பிரச்சினையில், அதுவும் காஷ்மீர் பிரச்சினையில் யாருடைய தலையீட்டையும் நம் நாடு நாடியது இல்லை. இந்தப் பிரச்சினையில் பிரதமர்தான் தொடர்புடையவர். எனவே அவர்தான் சபையில் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆனால் மத்திய அரசின் சார்பில், வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க முயற்சித்தார். அதை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு எதிர்த்து, அமளியில் ஈடுபட்டன. அத்துடன் அவை வெளிநடப்பும் செய்தன.

அதைத் தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா எழுந்து, அமளியில் சரியாக கேட்கவில்லை என்பதால் வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் தனது அறிக்கையை மீண்டும் வாசிக்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் அனுமதி அளித்தார்.

அப்போது வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் அறிக்கை அளித்துப் பேசினார். அவர், “ பாகிஸ்தானுடனான காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பிரதமர் கேட்கவில்லை. பாகிஸ்தானுடன் நிலுவையில் உள்ள எல்லா பிரச்சினைகளிலும் இரு தரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்க முடியும். இதுதான் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு” என குறிப்பிட்டார்.

மேலும், “ பாகிஸ்தானுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தை நடத்தவும், அந்த நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். சிம்லா மற்றும் லாகூர் உடன்படிக்கைகள் இதற்கான அனைத்து அடிப்படையையும் வழங்கி இருக்கின்றன” எனவும் கூறினார்.

இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் அமளிக்கு வழிவகுத்தது.

சபை கூடியதும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மாவும், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி. ராஜாவும் எழுப்பினர். இதில் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறினர்.

ஆனால் வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் (மக்களவையில் அளித்தது போன்று) அறிக்கை அளித்து பேசினார்.

ஆனாலும் எதிர்க்கட்சிகள் ஏற்காமல், பிரதமர் அறிக்கை அளிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. சபையை அமைதிப்படுத்த தலைவர் வெங்கையா நாயுடு முயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் அவர் சபையை ஒத்திவைத்தார்.

இரு சபைகளிலும் இந்த விவகாரம் புயலையும், அமளியையும் ஏற்படுத்தி விட்டதால் பிற அலுவல்கள் பாதிப்புக்குள்ளாகின

கருத்துகள் இல்லை: