சனி, 27 ஜூலை, 2019

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும்; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி :மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஒரு மாதத்திற்குள் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஒரு மாதத்திற்குள் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை, அந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர் வக்கீல், மாணவர்களின் பயணத்தை பெற்றோர் இணையதளம் மூலமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-

தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளி பஸ்கள், வேன்கள் என்று அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கை

அந்த சுற்றறிக்கையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஜி.பி.எஸ். கருவியும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும் ஜி.பி.எஸ். கருவிகளும் எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களின் போக்குவரத்தை கண்காணிக்க அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்திவிட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதிகள் உத்தரவு

பின்னர் அந்த சுற்றறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்

கருத்துகள் இல்லை: