புதன், 24 ஜூலை, 2019

என்னை அதிமுக பொதுச்செயலாளராக்குங்கள்..மோடி + அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் வேண்டுதல்

epsamit shah o panneerselvamnakkheeran.in - prakash" : ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு போனதற்கு காரணம் அவரது மகனை மந்திரியாக்குவதற்கு என்று கூறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷா மற்றும் தமிழகத்தின் மத்திய அமைச்சரான நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்திக்கும்போது தன்னுடன் யாரையும் துணைக்கு வைத்துக்கொள்ளவில்லை.
நிர்மலா சீதாராமனை சந்திக்கும்போது மட்டும் கடைசி 15 நிமிடங்கள் தமிழகத்தின் நிதித்துறை செயலாளரான கிருஷ்ணன் உடனிருந்தார். ஆகவே நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவில் வரப்போகும் மந்திரிசபை மாற்றத்தில் மகனை மந்திரியாக்க மட்டும் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித்தியாசமான கோரிக்கையை பாஜகவிடம் ஓ.பன்னீர்செல்வம் முன் வைத்திருக்கிறார்.
 ''நான் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். என்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக்குங்கள். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் துணையோடு கட்சியை கைப்பற்றி விடுவார். அது பாஜகவுக்கு எதிரான கட்சியாக மாறிவிடும்'' என ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் சொன்னதற்கு பாஜக என்ன பதில் சொல்லியிருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. அடுத்து பாஜக, எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கப்போகும் நடவடிக்கைகள்தான் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றதன் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை வெளிப்படுத்தும். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை நன்றாக வரவேற்று மணிக்கணக்கில் அவருடன் தனியாக பாஜக பேசியதில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைக்கு பச்சை சிக்னல் தரப்பட்டுள்ளது என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: