வெள்ளி, 26 ஜூலை, 2019

சத்திஷ்கர் இளம்பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்து போதை ஊசி ஏற்றி பாலியல் வன்முறை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அக்கம் பக்கத்தினர் மற்றும் இளம்பெண்ணின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த நிஷுகுப்தா (வயது20) என்ற வாலிபர் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண் நேற்று முன்தினம் அப்பகுதியில் மீட்கப்பட்டார். அவர் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் கடிபட்ட அடையாளங்கள் இருந்தன. மேலும் அவரது உடலில் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மயக்கமடையச் செய்து அவரை 10 நாட்களாக அடைத்து வைத்து கற்பழித்ததும் தெரிய வந்தது.
அந்த இளம்பெண் அடித்து உதைத்து கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட இளம்பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் நிஷுகுப்தா தான் அவரை கற்பழித்ததாக கூறினார்.


இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவத்தன்று நிஷுகுப்தா இளம்பெண்ணை சந்தித்து பேசியபோது அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இளம்பெண் மயங்கிவிட்டார். அதன்பிறகு அவரை அறையில் அடைத்து வைத்து கற்பழித்து சித்ரவதை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் சிங்குரலி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் 3 பேர் கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை லிப்ட் கொடுப்பதாக கூறி காரில் ஏற்றி மானபங்கப்படுத்தி உள்ளனர்.

பின்னர் மாணவியை சாலையோரம் வீசிச் சென்றனர். மாணவி சாலையில் கிடப்பதை பார்த்து அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: