வெள்ளி, 26 ஏப்ரல், 2019

நள்ளிரவில் நடுசாலையில் கல் வைத்து நூதன திருட்டு...சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த போலீசார்...

midnight robbery in Madurai...midnight robbery in Madurai...nakkheeran.in - /kalaimohan : இருசக்கர வாகன ஓட்டிகளை நிலைதடுமாறி கீழே விழ வைக்க நள்ளிரவில் நடுசாலையில் ஒரு பெரிய கல்லை போட்டுவிட்டு நூதனமுறையில் திருட்டில் ஈடுபட்ட மதுரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு வேலையை முடித்துவிட்டு பாஸ்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது திருப்பரங்குன்றம் பூங்கா அருகே சென்றபோது விபத்தாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார் பாஸ்கர். விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால் அந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அப்போது பாஸ்கருக்கு விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தன்று மர்ம ஆசாமி ஒருவன் நள்ளிரவில் நடு சாலையில் பெரிய கல்லை தூக்கி வைத்துவிட்டு அருகில் உள்ள சிறிய சுவர் மீது ஒய்யாரமாக படுத்துக்கொண்டான்.
இதனையடுத்து அந்த வழியாக வரும் வாகனங்கள் அந்த பெரிய கல்லை ஒதுங்கி கடந்து செல்கின்றன. அந்த சிசிடிவி காட்சியில் கனரக சரக்கு வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் ஒருவர் சாலையில் பெரிய கல் கிடப்பதை  சுதாரித்துக் கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தி அந்தக் கல்லை அகற்ற முயலுகிறார். அப்போது அந்தக் கல்லை நடு சாலையில் போட்ட அந்த மர்ம ஆசாமி அவரை திட்டி விரட்டியடிக்கிறான். அதனையடுத்து அந்த ஓட்டுனர் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
அதனை அடுத்து திரும்பவும் அந்த திருடன் மதில் சுவர் மேல் அமர்ந்து கொள்கிறான். இப்படி எதற்காகவோ காத்திருப்பது போல் அந்த திருடன் காத்திருக்கையில் அவ்வழியே வரும் இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த கல்லின் மீது மோதி தரதரவென இழுத்துக் கொண்டு கீழே விழுகிறது. அப்போது இந்த சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட திருடன் விபத்தாகி தரையில் மயங்கிய நிலையில் கிடக்கும்  பாஸ்கரின் மொபைல் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு இடத்தை விட்டு காலி செய்கிறான்.

தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் 20 நிமிடமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரை பல வாகனங்கள் அவ்வழியே கடந்து சென்றும் காப்பாற்ற முன்வரவில்லை. அதனை அடுத்து இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீட்கப்பட்ட பாஸ்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நள்ளிரவில் நடு சாலையில் கற்களை வைத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்ய போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கொள்ளையன் ராஜா என்பவனை கைது செய்தனர்.

இவன் பல இடங்களில் இதே போல் கைவரிசை காட்டி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: