திங்கள், 16 அக்டோபர், 2017

அடுத்த தீபாவளிக்குள் ராமர் கோயில்!

மின்னம்பலம் : அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும். எனவே, பக்தர்கள் தயாராக இருக்க வேண்டும் என பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
பீகாரில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குப் பல்வேறு தடைகள் இருந்தன. அந்தத் தடைகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டுவருகிறது. விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுவருகின்றன.
இந்த வாரம் நாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட உள்ளோம். அடுத்த தீபாவளிக்கு ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வரத் தயாராக இருக்க வேண்டும். அடுத்த தீபாவளிக்கு பக்தர்களை வரவேற்க ராமர் கோவில் தயாராகிவிடும். இந்துத்துவத்தின் சித்தாந்தம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை என்பது முக்கியம்.

அதேபோல், வடக்கு பீகாரில் உள்ள சீதாமர்கி எனும் இடம் சீதை பிறந்த இடம். அங்கு சீதாவுக்கு மிகப் பெரிய கோவில் கட்டும் முயற்சியை விராட் ஹிந்துஸ்தான் சங்கம் எடுக்க வேண்டும். காரணம், ஸ்ரீ ராமனை அவரது மனைவி ஜகத் ஜனனி ஜானகி இல்லாமல் சிந்திக்க இயலாது. மேலும், அங்கு ஒரு பல்கலைக்கழகமும் உருவாக்கப்படும். இந்தியாவின் பாரம்பரியச் சிறப்பை அந்த பல்கலைக்கழகம் மூலம் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: