செவ்வாய், 17 அக்டோபர், 2017

இரட்டை இலை யாருக்கென்று 23 ந்தேதி தெரிந்து விடும் ... தெரிஞ்சுட்டாலும் ...

தினமலர் :  இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை, தேர்தல் ஆணையம், வரும், 23க்கு, மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இதனால், இரட்டை இலை யாருக்கு என்பது, அன்று தெரிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, அ.தி.மு.க.,வின் இரட்டை இலைச் சின்னத்தை, தலைமை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதன்பின், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்து இருந்த நிலை மாறியது. முதல்வர், பழனிசாமி தலைமையிலான அணியும், எதிர்தரப்பான, பன்னீர்செல்வம் அணியும் பொதுக்குழுவை கூட்டி, முறையாக இணைந்தனர்.அணிகள் இணைந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் அப்படியே நீடித்தது.
இணைப்பு கடிதம்

இதையடுத்து, தாங்களே உண்மையான அணி எனக் கோரி, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர், அதிகாரப்பூர்வ இணைப்புக் கடிதம் அளித்தனர்.எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் ஆகியோரது ஆதரவு கடிதங்கள் கேட்கப்படவே, அதற்கான பிரமாணப் பத்திரங்களை, பழனிசாமி மற்றும் பன்னீர் அணியினர் இணைந்து, ஓரணியாக தாக்கல் செய்தனர். இதையடுத்து, இம்மாதம்,
6ல், வழக்கு விசாரணை, தேர்தல் ஆணையத்தில் நடந்தது; அதில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், வாதங்களை முன்வைத்தனர்.இந்நிலையில், சசிகலா அணி தரப்பிலான வாதங்களுக்காக, நேற்று மீண்டும் இது தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பங்கேற்க, தமிழக அமைச்சர்கள், சண்முகம், உதயகுமார், அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி,மைத்ரேயன் ஆகியோருடன், மூத்த வழக்கறிஞர்கள், வைத்தியநாதன், விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் வந்திருந்தனர்.சசிகலா அணி தரப்பில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்கத் தமிழ்ச் செல்வன், பழனியப்பன் ஆகியோரும் வந்திருந்தனர். இந்த அணிக்காக, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அஸ்வினி குமார் ஆஜரானார். இவருடன், வழக்கறிஞர்கள், விஜய் ஹன்சாரியா, உபல், ராஜா செந்துார் பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.அஸ்வினிகுமார் வாதிட்டதாவது:பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்துள்ளவை, போலி பிரமாணபத்திரங்கள். அவற்றில் உண்மைக்கு மாறாக, போலி கையெழுத்துகள் உள்ளன.

அவசரம் கூடாது



ஆறு நிர்வாகிகளிடம் மிரட்டி, கையெழுத்துகளைப் பெற்று, தாக்கல் செய்துஉள்ளனர். 100க்கும் அதிக மானோரின் கையெழுத்துகள் போலியானவை; அவற்றை பரிசீலனைக்கு எடுக்கக் கூடாது.சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து, தீர்வு< காண்பதற்காக, கோர்ட் குறிப்பிட்டுள்ள, நவ., 10ம் தேதி என்பது, இறுதியான காலக்கெடு அல்ல. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்கள் ஒவ்வொன்றையும், தனித்தனியே விசாரிக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடக் கூடாது.இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும், தேவைப்பட்டால், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வரையில், இரட்டை இலைச் சின்னத்தை, முடக்கி வைக்க வேண்டும் என்றும், அவர் வாதிட்டதாக தெரிகிறது.தீபா அணி சார்பில் வந்திருந்த, வழக்கறிஞர் வாதிடுகையில், 'பொதுச் செயலருக்கான தேர்தலை முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும். 'கட்சி விதிகளின்படி, தொண்டர்கள் ஓட்டு போட்டு, புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுத்து, அவரிடம் சின்னத்தை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.


தினகரன் முயற்சி தோல்வி


இறுதியில், 'இந்த வழக்கு விசாரணை, வரும், 23ல், மீண்டும் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பது, 23ல் தெரிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சின்னத்தை முடக்க நினைத்த, தினகரனின் முயற்சி தோல்விஅடைந்துள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க., வின் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இரட்டை இலையை முடக்கும்படி, தேர்தல் ஆணையத்தில், தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்திருப்பது, அந்த கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: