சனி, 21 அக்டோபர், 2017

மிரட்டிப் பணியவைக்க அதிமுக அல்ல!

மிரட்டிப் பணியவைக்க அதிமுக அல்ல!
மின்னம்பலம் :மத்தியில் ஆட்சியில் உள்ளோம் என்பதற்காக, பாஜகவினர் மிரட்டிப் பணிய வைக்கப் பார்கிறார்கள். ஆனால் மிரட்டிப் பணிய வைக்க அனைவரும் அதிமுக அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இன்று (அக்டோபர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெர்சல் திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் குரல் எழுப்புவது மட்டுமல்ல மதரீதியாக பிரச்சினைகளை உருவாக்கி நடிகர், தயாரிப்பாளரை மிரட்டுகின்றனர். விடுதலைப் போராட்டக் காலம் முதல் திரைப்படங்களில் அரசியல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அரசின் கொள்கைகளை விமர்சிக்கக் கூடாது என்று பாஜக தலைவர்கள் பேசிவருவது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
மத்தியில் ஆட்சியில் உள்ளோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகின்றனர். அனைவரையும் மிரட்டிப் பணியவைக்க, அனைவரும் அதிமுகவினர் அல்ல என்பதனை அவர்கள் உணர வேண்டும். அதிமுகவைப் பணியவைத்தது போன்று, மற்ற அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர், நடிகர்கள் அனைவரையும் தங்களின் மிரட்டலின் மூலம் பணிய வைக்க முயலும் பாஜகவின் முயற்சி படுதோல்வியில்தான் முடியும். மிரட்டலை, அச்சுறுத்தலை வன்முறைத் தூண்டுதலை, மதவெறியைத் தூண்டும் அநாகரீகப் போக்கைக் கைவிட்டு, அரசியல் ரீதியாகத் தமிழக பாஜக தலைவர்கள் பேசுவது நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: