புதன், 16 ஆகஸ்ட், 2017

நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம்!

கரூரில் நூடுல்ஸ் சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவி மரணமடைந்துள்ளதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் பெரியவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருடைய மகளான ஜீவசக்தி(14), தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட்-13 ஆம் தேதி நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு தனது தம்பியுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜீவசக்திக்கு திடீரென வாந்தி, வாயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடைய பெற்றோர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆகஸ்ட்-15) மதியம் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை நூடுல்ஸ் சாப்பிட்டதால் தான் தனது மகள் உயிரிழந்தார் என்று வெள்ளியனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரியவரப்பட்டி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: