வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

BBC :ஸ்பெயின் பார்சிலோனா .. வேன் மோதி 13 பேர் கொல்லப்பட்டனர்.. 50 பேர் காயம்

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "அந்த வேன் நிற்கும் முன்பாக, பொதுமக்களை குறி வைத்தே வந்தது" என்று தெரிவித்தனர். பார்சிலோனாவில் இருந்து வெளிவரும் எல் பாய்ஸ் நாளிதழ், "டஜன் கணக்கான மக்கள் மீது மோதிய பிறகு, அந்த வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்" என கூறியுள்ளது. இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன. மேலும், ஒன்று அல்லது இரண்டு ஆயுததாரிகள் அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் சென்று ஒளிந்துள்ளதாகவும் அவை கூறியுள்ளன. அந்த பகுதியில் பணியாற்றி வரும் ஸ்டீவன் டர்னர் பிபிசியிடம் கூறுகையில், "ராஸ் ரம்ப்ளாஸில் மக்கள் மீது வேன் மோதியதை அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: