புதன், 16 ஆகஸ்ட், 2017

ட்ராபிக் ராமசாமியின் வரலாறு படமாகிறது ... எஸ் ஏ. சந்திரசேகர் நடிக்கிறார் !

எஸ்.ஏ.சிக்கு கைகொடுக்கும் டிராஃபிக் ராமசாமி
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை எஸ்.ஏ.சியுடன் பல காலம் உதவி இயக்குநராய் பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்கவுள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் மற்றும் இதர ஆர்ட்டிஸ்ட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று( ஆகஸ்ட்15) சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சியின் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வருகை தந்துள்ளார்.
தள்ளாத வயதிலும் தனிஒருவராக அரசை எதிர்த்து, மக்களுக்காக குரல் கொடுத்து வருபவர் டிராஃபிக் ராமசாமி. பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடுத்தார். இதில் பெரும்பாலானவை மக்களுக்குச் சாதகமாக அமைந்தாலும், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தவர். இதன் காரணமாக அரசியல்வாதிகளும், ரவுடிகளும் அவரைப் பலவாறு தொந்தரவு செய்ததோடு, கொலை செய்யவும் முயற்சி செய்தனர். அவருடைய வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.அவற்றுள் நிறைய சம்பவங்கள் திரைப்படமாக்குவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் அவருடைய வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளனர்.


எஸ்.ஏ.சியை அலுவலகத்தில் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்ததோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார் ராமசாமி. அதோடு படமாகவுள்ள தன் வாழ்க்கைக் கதையான டிராஃபிக் ராமசாமி படத்தைப் பற்றியும் ஆவலாக கேட்டுத் தெரிந்து கொண்டார்.மேலும் தன்னுடைய பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை எஸ்.ஏ.சியுடன் பகிர்ந்து கொண்டதோடு, இப்படத்திற்காக தான் எல்லா வகையிலும் உதவி புரிவதாக தெரிவித்துள்ளார். மின்ன்னம்பலம்

கருத்துகள் இல்லை: