புதன், 12 ஜூலை, 2017

மதுரை - விகாஷ் ...தேசிய நீச்சல் போட்டியில் வென்ற தமிழக மாணவர்!

மின்னம்பலம் : தேசிய அளவில் நடந்த ஜூனியர்களுக்கான நீச்சல் போட்டியில் தமிழக மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்தவர் பி.விகாஷ் . இவர் மதுரையில் உள்ள லீ சார்ட்லியர் என்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். தேசிய அளவில் ஜூனியர்களுக்கான நீச்சல் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 51 நீச்சல் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். அதில் மதுரையில் இருந்து மட்டும் மூன்று மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் இறுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 22 பதக்கங்களை வென்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் விகாஷ் 14 வயது உட்பட்டவர்களுக்கான போட்டியில் 50மீட்டர் ப்ரீ ஸ்டைலில் தங்கம் வென்றார். இவர் 24.76 வினாடிகளில் அந்த தொலைவை கடந்து தேசிய அளவிலான புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மகாராஷ்டிராவை சேர்ந்த வீர்ராஜ்பிரபு என்ற வீரர் 25.39 வினாடிகளில் கடந்ததே முன்பு இருந்த சாதனையாகும்.
மேலும் இதுதவிர 100 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியிலும் 55.38 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து விகாஷ் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த சஞ்சய் என்ற நீச்சல் வீரர் 55.47 வினாடிகளில் அந்த தூரத்தை கடந்துள்ளார். தற்போது இந்த சாதனையையும் விகாஷ் முறியடித்துள்ளார்.
மேலும் 50மீட்டர் பட்டர் பிளை நீச்சல் பிரிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் வருகின்ற செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடக்கவுள்ள 9 வது ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள விகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதுவரை மொத்தம் நான்கு பதக்கங்களும், இருதேசிய சாதனையும் படைத்துள்ளார்.
சாதனை படைத்த விகாஷ் திங்கட்கிழமை மதுரை திரும்பினார். அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் அவரை பாராட்டி பரிசு வழங்கினார். அக்வாடிக் நீச்சல் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் சரோஜினிதேவி கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: