ஞாயிறு, 9 ஜூலை, 2017

தோழர் பத்மா எங்கே? உறுதியான தகவல் எதுவும் இதுவரை கிடக்கவில்லை!

விவேக் மாவோயிஸ்ட்" அன்பார்ந்த தோழர்களே!
கடந்த ஜூலை 5-ம் தேதி
தோழர் பத்மாவிற்காகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, தமிழக “க்யூ” பிரிவு உளவுத்துறையினர், தாங்களோ, ஆந்திர காவல்துறையோ தோழர் பத்மாவை கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஜூலை 3-ம் தேதி மதியம் 12.00 மணி வாக்கில் தோழர் பத்மாவை ஈரோடு இரயில் நிலையத்தில் காவல்துறையினர் அழைத்துச் சென்றதைத் தான் நேரில் பார்த்ததாக ஒரு தோழரிடமிருந்து தகவல் வந்தது. இதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு நாம் காவல்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரைத் தொடர்பு கொண்டோம். அவ்வகையில் நாம் பத்திரிகை நிருபர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்களுக்கு ஏற்கனவே அப்படி ஒரு செய்தி வந்திருப்பதாகவும், எந்த காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். இதன்பிறகுதான், முகநூலில் மேற்படி செய்தி என்னாலும், பல்வேறு சனநாயக சக்திகளாலும் பரவலாக எடுத்து செல்லப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற ஆட்கொணர்வு வழக்குகளில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, கையிருப்பில் உள்ள தோழரை அன்றுதான் கைது செய்ததாகச் சொல்லி ஏதாவதொரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்வது வழக்கம். என்னுடைய கைது, தோழர் ரஞ்சித் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட பல தருணங்களில் இதுதான் நடந்தது.
ஆனால், இதற்கு மாறாக, க்யூ பிரிவு கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி கைது செய்ததாக சொல்லப்படும் தகவல் உண்மை இல்லை என்று கூறியதையும், இதுவரை தோழர் பத்மாவை எந்த நீதிமன்றத்திலும் ஒப்படைக்கவில்லை என்ற விசயத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, மேற்படி செய்தி தவறானதாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
உளவுத்துறையினர் வேண்டுமென்றே வேறுசில மறைமுகத் திட்டங்களுடன் ஒரு தவறான தகவலை ஊதிப் பெருக்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் வருகிறது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகள் எதுவும் சம்பவம் நடந்தது குறித்த எந்த சந்தேகத்தையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, கைது எங்கே நடந்தது, எப்படி நடந்தது என தினசரி கூடுதல் தகவல்கள்தான் வந்து கொண்டே இருந்தன. ஊடகங்கள் பொதுவாக காவல்துறை, உளவுத்துறை தரப்பில் ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் செய்திகளை வெளியிடுவதில்லை. ஆகவே, உளவுத்துறையினர் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு தமது மறைமுகத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்களோ என்றும் தோன்றுகிறது.
தோழர் பத்மாவை தொடர்புகொள்ள முடியாத நிலையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, அவரது உயிர் மற்றும் பாதுகாப்பை கருதிதான் முகநூல் பதிவுகள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தோழர் பத்மாவிற்காக பல்வேறு மனித உரிமை இயக்கங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். முகநூலில் ஏராளமான தோழர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு போலி மோதல் படுகொலையை முன்னரே தடுத்திட வேண்டும் என்ற விழிப்புணர்விலிருந்துதான் இவையெல்லாம் நடந்துள்ளன. இது நமது சமூகத்தில் தற்சமயம் நிலவும் நல்ல அரசியல் சூழலையே காட்டுகிறது. ஊடக நண்பர்கள் சிலரும்கூட இதே நோக்கத்திலிருந்துதான் செய்திகளை வெளியிட்டுள்ளனர். மேற்படி நடவடிக்கைகளில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், அமைப்பினருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் அனைத்துவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராக, குறிப்பாக புரட்சிகர, சனநாயக சக்திகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம். இதற்கு அனைவரும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை: