திங்கள், 10 ஜூலை, 2017

சானிடரி நாப்கின் GST வரி ..... பெண்கள் மீண்டும் ஆதிகாலத்துக்கு ...

Lakshmi Priya கொல்கத்தா: சானிட்டரி நாப்கின்கள் மீது ஜிஎஸ்டி
விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நாப்கின்களை பயன்படுத்த விரும்பாத நிலைக்கு செல்வர் என்றும் இதனால் அவர்களுக்கு சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிகிறது.
 பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது சுகாதாரத்துக்கு நன்மை விளைவிக்கும். மாதந்தோறும் பயன்படுத்தும் துணிகளால் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நாப்கின்களை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகள் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விலையேற்றத்தால் பாதிப்பு தற்போது நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு எனப்படும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சானிட்டரி நாப்கின்கள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது விலையேற்றத்துக்கு வழி வகுத்தது. இந்த விலையேற்றம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சிரமமாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இதனால் பாலியல் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ..


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோனாகஞ்ச் என்ற பகுதிதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய பாலியல் தொழில் நடைபெறும் பகுதியாகும். இங்குள்ள பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாப்கின்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். அதை பயன்படுத்துவதை அருவெறுப்பாகவே கருதினர். சுகாதாரம் தொடர்பாக பாலியல் தொழிலாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர்களும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டியால் நாப்கின்களின் விலை அதிகரித்துள்ளதால் இவர்கள் நாப்கின்களை விட்டுவிட்டு பழைய நிலைக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது அவர்களின் சுகாதாரத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது. பாலியல் தொழிலாளிகளுக்கான அமைப்பில் சுமார் 1.30 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டி குறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், ஆண்கள் பயன்படுத்தும் கான்டத்துக்கு வரி விலக்கு அளித்திருப்பது பாலியல் தொழிலாளிகளுக்கு நிம்மதி அளித்தாலும் நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டியால் அவர்கள் நாப்கின் பயன்படுத்தாத காலத்துக்கே சென்று விடுவர். ஏற்கெனவே நாப்கின் பயன்படுத்துவதை அருவெறுப்பாக கருதும் அவர்கள் பயன்படுத்தாமல் விட்டுவிடும் நிலை ஏற்படலாம்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் பாலியல் தொழிலாளிகளில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தியவர்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது 85 சதவீதத்துக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயன்பாடு அதிகரித்ததற்கு காரணம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், மானிய விலையில் கிடைக்கப்பட்ட நாப்கின்களுமே ஆகும். கடந்த 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் பாலியல் தொழிலாளிகளுக்கென்று மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பாக்கெட்டுகள் வரை சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இனி அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. கான்டம்களின் விலை ஏற்றம் அடையாததால் எய்ட்ஸ் நோய் பரவுவது நிச்சயம் தடுக்கப்படும். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. வரும் 2025-இல் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் tamiloneindia

கருத்துகள் இல்லை: