செவ்வாய், 11 ஜூலை, 2017

சேரி behaviour " சேரி நடத்தை ... பொதுப்புத்தியும் உண்மை நிலையும் .

Shalin Maria Lawrence "சேரி behaviour " சேரி நடத்தை .இப்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணை திட்டிவிட்டார்கள் என்று சொல்லி காலையில் இருந்து எல்லோருக்கும் அப்படி ஒரு கோவம் .
அப்படி பார்த்தால் சேரி என்பது அசிங்கம் என்று உங்களில் ஒவ்வொருவரும் நினைத்து கொண்டிருக்கிறீர்களா ?
அவர் சேரி நடத்தை என்று சொன்னபோது நன்றி சொல்லி இருக்கவேண்டும் .சரி ... நீங்கள் சொல்லாத நன்றியை நான் சொல்லுகிறேன் .
-------------------------------------------------------------------------------------------------
வந்தாரை வாழவைக்கும் சேரி நடத்தை -நன்றி
அடைக்கலம் தேடி வந்தாரை எந்த ஜாதி என்று கேட்காமல் சேர்த்துக்கொள்ளும் சேரி நடத்தை -நன்றி
தீட்டு என்று உள்ளே வந்த எவரையும் ஒதுக்காதது சேரி நடத்தை -நன்றி
ரத்தபந்தம் ,சொந்தபந்தம் வித்தியாசம் பாராமல் பசித்தவயிறுக்கு தன் கால் வயிற்று கஞ்சியை பகிர்ந்து கொடுக்கும் சேரி நடத்தை -நன்றி .
தெருவில் கிடைக்கும் நாய்க்கு முதலில் சோறு வைத்துவிட்டு மிஞ்சியதை உண்ணும் ரிக்க்ஷாகாரரின் சேரி நடத்தை -நன்றி
நீ கொடுக்கும் காசுக்காக இல்லாமல் ,உன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்காக "அய்யா ,அம்மா " என்று அழைக்கும் உன் பணிப்பெண்ணின் சேரி நடத்தை -நன்றி

பக்கத்து தெருவில் சாவு விழுந்தால் தன் வீட்டில் சோறு பொங்காமல் சொந்த இழப்பை போல் அழுது தீர்க்கும் சேரி நடத்தை - நன்றி
கிறிஸ்துமஸிற்கு எல்லா வீட்டிலும் நட்சத்திரம் கட்டி ,தீபாவளிக்கு எல்லா வீட்டிலும் பட்டாசு உடைக்கும் சேரி நடத்தை -நன்றி
உங்கள் பிரசாதங்கள் சுவையாய் இருக்க காலை நான்கு மணிக்கே எழுந்து மார்க்கெட்டில் வியர்வை வழிய காய் கறி மூட்டை சுமந்து ,மீன்பாடி வண்டி மிதித்து உன் கோயில் வாசல் சேர்க்கும் சேரி நடத்தை -நன்றி .
உன் பசித்த குழந்தைகளுக்கு தன் டீ காசில் பஜ்ஜி வாங்கிக்கொடுத்து பத்திரமாய் விடு சேர்க்கும் ஆட்டோக்காரரின் சேரி நடத்தை -நன்றி
கக்கூஸ் கழுவிய பணத்தில் உன் கோவிலுக்கு மணக்க மணக்க பூ வாங்கி வருகிறது சேரி நடத்தை -நன்றி
துப்புரவு வேலை செய்தாலும் தன் பிள்ளைகளை IAS படிப்பிற்கு தயாராக்கி கொண்டிருக்கிறது சேரி நடத்தை -நன்றி
உன்னால் துரத்தப்பட்ட உன் வீட்டின் முதியோருக்கும் ,புத்தி பேதலித்தவருக்கும் ,நோய்வாய்பட்டவருக்கும் தன் குடிசையின் திண்ணையில் இடம் கொடுத்து கொண்டிருக்கிறது சேரி நடத்தை -நன்றி .
அடக்குமுறைக்கு மாய்த்துக்கொல்லாமல் ,தனக்கென ஒரு சமத்தூவ ராஜ்ஜியம் அமைத்து கொண்டது சேரி நடத்தை -நன்றி
படித்து கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக ஆகி , நீ மறுத்த கல்வியை உன் பிள்ளைக்கு மறுக்காமல் வழங்கி கொண்டிருக்கிறது ரோசியின் சேரி நடத்தை -நன்றி .
அடக்குமுறைக்கும், தீண்டாமைக்கு ,வெறுப்புக்கும் ஆளானாலும் வெட்ட வெட்ட வாசம் தரும் சந்தன மரம்ப்போல் அன்பை மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறது சேரி நடத்தை .
எங்கள் சேரி பெருமையயை இன்று பேச ஒரு வாய்ப்பை அளித்த காயத்ரிக்கு ." எச்சை" என்கிற இழிவான சொல்லக்கூட பயன்படுத்த தெரியாத முன்னாள் சேரி வாசி ஷாலினின் நன்றி.
ஷாலின்

கருத்துகள் இல்லை: