வியாழன், 13 ஜூலை, 2017

கோபாலபுரத்தில் கோபாலகிருஷ்ண காந்தி!

கோபாலபுரத்தில் கோபாலகிருஷ்ண காந்தி!
minnambalam :எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னை வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஜூலை 12ஆம் தேதி நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்று தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

அப்போது, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கோபாலகிருஷ்ண காந்தியை வரவேற்று, குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மதச்சார்பற்றக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்திக்கு, திமுக-வின் சார்பில் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை: