சனி, 5 நவம்பர், 2016

எல்லை தாண்டி வரும் மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் .. மங்கள சமரவீர உறுதி

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக்குழு: இந்தியா- இலங்கை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு.
இந்தியா - இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை மந்திரி ராதா மோகன்சிங், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், இலங்கை சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமவீரா, மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமர வீரா,தமிழர் தேசிய முன்னணி சுமந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன்பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 டெல்லியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீனவ பிரதிநிதிகள் குழுக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பினரும் மனம் விட்டு நிறைய வி‌ஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர். இலங்கை தரப்பில் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதி கட்டமாக இந்தியா - இலங்கை மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பின்னர் இலங்கை மந்திரிகள் பேட்டியளித்தனர். அப்போது ‘‘எல்லைத் தாண்டும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது. அதேபோல், மீனவர்கள் எல்லைத்தாண்டும்போது உயிர்ச்சேதம் ஏற்படாது. மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் படகுகளை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும். இந்த குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: