வியாழன், 3 நவம்பர், 2016

தமிழ் சினிமா நூற்றாண்டு: நடராஜ முதலியார் என்பவர் ராமானுஜ அய்யங்கார், சீனிவாச அய்யர் என்றிருந்தால் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு இருக்குமா?

மோ. அருண் மோ. அருண்தமிழ் சினிமாவின் நூற்றாண்டு தமிழ்நாட்டை சார்ந்த எந்த ஊடகத்தாலும் கவனிக்கப்படாமல் அனாதையாக கடந்து செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழின் எல்லா ஊடகங்களும் சினிமாவை சார்ந்தே தங்கள் பிழைப்பை நடத்துகிறது. ஆனால் தங்களுக்கு வருமான ஆதாரமாக எது இருக்கிறதோ அதன் நூற்றாண்டை கொண்டாடாமல் தவிர்ப்பது எதனால்? எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டை தமிழ் இந்து சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு குறித்து ஒரு வரி கூட அதன் சினிமா செய்தியாளர்கள் எழுதுவதில்லை. எனில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, நடராஜ முதலியார் என்பவர் ராமானுஜ அய்யங்கார், சீனிவாச அய்யர் என்றிருந்தால் இந்நேரம் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு இருக்குமா இல்லையா? நம்மவா இல்ல, அதனால் ஏன் இந்த நூற்றாண்டை கண்டுக்கொள்ள வேண்டும் என்று தினமணி, தினமலர், தமிழ் இந்து போன்ற பார்ப்பன பத்திரிகைகள் புறக்கணிக்கிறதா என்கிற ஐயம் இயல்பாகவே எழுவதை தவிர்க்க முடியவில்லை.



tamil-cinema-cen
தமிழின் முதல் படம் கீசக வதம் எப்போது வெளியானது என்பதற்கான ஆதாரம்.

சரி இதுதான் நூற்றாண்டா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்று வைத்துக்கொண்டாலும், தமிழ் ஸ்டுடியோ சார்பாக நான் தொடர்ச்சியாக அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு வருகிறேன். தியடோர் பாஸ்கரன் இதுகுறித்து செம்மையான ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார். நடராஜ முதலியார் தன்னுடைய நினைவாற்றல் செம்மையாக இருந்த காலத்தில் கீசக வதம் வெளியான ஆண்டு 1916 என்கிறார். பெரும்பாலான ஆங்கில பத்திரிகைகள் தமிழின் முதல் படம் வெளியான ஆண்டு 1916 என்றுதான் எழுதியிருக்கிறது. இப்போதல்ல, 1930 களிலேயே இப்படியாக எழுதியிருக்கிறார்கள். எனவே இதுதான் நூற்றாண்டு என்பதில் பிரச்சனையில்லை. அதனை ஏன் கொண்டாட வேண்டும் என்பதில்தான் அவர்களுக்கு பிரச்னை இருக்கிறது.
ஊடகங்கள் எப்போதும் பிரபலங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். அருமை இயக்குனர் அண்ணன் மணிரத்னம், எஸ். பாலச்சந்தர் என்கிற இயக்குநருக்காக ஒரு விழா எடுத்தார். இது தமிழ் சினிமா நூற்றாண்டு என்று அவருக்கு தெரிந்திருக்கும். ஏன் அதற்காக ஒரு விழா எடுக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை. மணிரத்னம் ஒரு விழா எடுக்கிறார் என்றால் அதனை எவ்வித கேள்வியுமின்றி ஊடகங்கள் பிரசுரிக்கும். தமிழ் சினிமா நூற்றாண்டு என்கிற பதிவாவது இருக்கும். ஆனால் திரைத்துறையில் யாரும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கிறது. பார்ப்பனர்கள் அல்லாத ஊடகங்கள் இதில் எவ்வித வியாபார தன்மையும் இல்லை என்று அதனை கண்டுகொள்ளவில்லை போலும். மற்ற இயக்கங்கள் சார்ந்த ஊடகங்கள் இது குறித்து எவ்வித புரிதலும், தெளிவும் இன்றி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம்தான். ஒரு மாபெரும் மக்கள் ஊடகம் தன்னுடைய நூற்றாண்டில் வந்து நிற்கிறது. அதனை கண்டுகொள்ள இங்கே ஒரு நாதியில்லை.
முகப்பில் உள்ள தினசரி 1936 இல் வெளியான, தி மெட்ராஸ் மெயிலின் பிரதி. இதில் நடராஜ முதலியாரை நேர்காணல் செய்திருக்கிறார்கள். அவரது வார்த்தையாலே முதல் படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை பதிவு செய்திருக்கிறார். 1916 இல் முதல் படத்தை முடித்துவிட்டு இரண்டாவது படத்தை 1917 இன் தொடக்கத்தில் தொடங்கிவிட்டதாக அவரே சொல்லியிருக்கிறார். ஆனாலும் இன்னமும் தமிழில் ரெண்டார் கை, அறந்தை மணியன் உட்பட பலரும் முதல் படம் வெளியான ஆண்டு 1916 அல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
மோ. அருண், திரை செயற்பாட்டாளர். தமிழ் ஸ்டுடியோ நிறுவனர்; படச்சுருள் இதழின் ஆசிரியர்  /thetimestamil.com/

கருத்துகள் இல்லை: