வெள்ளி, 4 நவம்பர், 2016

மருத்துவர்களிடமிருந்து உயிர் தப்பிய காட்டு யானையும் அதன் குட்டியும் .


கோவையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்று எழுந்து கொள்ள முடியாமல் இருந்த செய்தி கடந்த 19 ஆம் தேதியிலிருந்து தொலைக்காட்சியில் காட்டப்பட்டு வந்தது. காலில் அடிபட்டிருப்பதால் அந்த யானையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும். வயிற்றுக் கோளாறு எதோ இருக்கிறது என்றும் நினைத்துத்தான் வனத்துறை விலங்கின மருத்துவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், திடீரென்று அந்த யானை இன்று (24-10-2016) ஆண்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.


யானை கர்ப்பமாக இருப்பதைக் கூட அறியாமல் மருத்துவர்கள் தொடர்ந்து  5,6 நாட்களாக சிகிச்சை அளித்திருக்கும் அவலத்தை என்னவென்று சொல்ல? நிறைமாதக் கர்பம் கூட அறிந்துகொள்ள முடியாதவனை எப்படி  மருத்துவன் என ஏற்றுக் கொள்வது?
உண்மையிலேயே அவர்களெல்லாம் படித்த  மருத்துவர்கள் தானா?  அவர்கள் கொடுத்த சிகிச்சை சரியானதாகத்தான் இருந்திருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது.

கர்ப்பமான யானைக்குத் தவறான மருந்துகள் கொடுத்ததால் அந்த யானைக்கு என்னென்ன பக்க விளைவுகள் வருமோ என்றும் அந்தக் குட்டியானையின் உடல் நலனையும் குறித்தே கவலை உண்டாகிறது.

இதெற்கெல்லாம் காரணம் கல்வி வியாபாரமாக ஆன கேவலம் தான். பணம் கொடுத்து சீட் வாங்கி கல்லூரியில் சேர்ந்து  "டாக்டர்கள்" என்ற அடையாள அட்டையை மட்டும் கழுத்தில் மாட்டிக்கொண்டு கல்லூரி விட்டு வெளியேறும்  மடையர்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலைமைக்கு இந்த நிகழ்ச்சி அப்பட்டமான ஆதாரமாகவே உள்ளது.

இது விலங்கின மருத்துவர்கள் மட்டுமல்ல மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களும் கௌரவ டாக்டர்களாகவே பல்கலை கழகங்கள் வெளியேற்றிக்கொண்டிருக்கிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இவர்களையெல்லாம் நம்பித்தான் நம் உடல் நலனையும் உயிர் நிலையையும் பணயம் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

கொள்ளையடிப்பதையும் கூட்டு சதி செய்வதையும் கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசியல் காட்சிகள்  இவற்றையெல்லாம்  கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்களா?

நாட்டின் நிலைமை எங்கு சென்று கொண்டிருக்கிறது?
இவற்றையெல்லாம் யார் சரிசெய்யப் போகிறார்கள்?

 - லதாராணி பூங்காவனம்

கருத்துகள் இல்லை: