வெள்ளி, 4 நவம்பர், 2016

வயிற்றில் இருந்த குழந்தைக்காக புற்று நோய் சிகிச்சை செய்யாமல் உயிர்த்தியாக செய்த தாய் .. இலங்கை சபாநாயகரின் மகள்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயொருவர் தனது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்காக குறித்த நோயிற்கு சிகிச்சைபெறாது உயிர் துறந்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை பாராளுமன்றின் சபாநாயகரான கரு ஜயசூரியவின் இளைய மகளாவார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா ஜயசூரிய, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்
இங்கிலாந்தில் நேற்று மாலை காலமானார்.
இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் செய்திருந்த நிலையில் அந்த நாட்டில் வாழ்ந்து வந்துள்ளார். 40 வயதான சஞ்சீவனி இந்திரா இரு பிள்ளைகளின் தாயாவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சஞ்சீவனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் தனது இரண்டாவது குழந்தையை 28 வாரங்களாக வயிற்றில் சுமந்திருந்த நிலையில் மீண்டும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு முன்கூட்டிய சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றெடுக்கும்படியும், அதனையடுத்து, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற முடியுமெனவும் தெரிவித்திருந்தனர். தனது வயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காகவும் குழந்தை நல்லமுறையில் பிறக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவும் தாயான சஞ்சீவனி வைத்தியர்களின் ஆலோசனையை அப்போது ஏற்காது மறுத்துவிட்டார். இதையடுத்து 33 வாரங்களின் பின்னர் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அவர் சம்மதித்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார்.வீரகேசரி.காம்

கருத்துகள் இல்லை: