புதன், 5 அக்டோபர், 2016

nano நேனோ இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்

படம்: ராய்ட்டர்ஸ்.
2016-ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக இவர்களுக்கு நோபல் அறிவிக்கப்ப்பட்டுள்ளது. அதாவது தற்போது புழக்கத்தில் உள்ள சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் நேனோ-மெஷின்களை வடிவமைத்தவர்களான இந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சைச் சேர்ந்த ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காட்லாந்து விஞ்ஞானி சர் பிரேசர் ஸ்டோடர்ட், நெதர்லாந்து, கிரோனிஞ்சன் பல்கலைக் கழக விஞ்ஞானி பெர்னர்ட் ஃபெரிங்கா ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு வேதியியல் நோபல் வழங்கப்படுகிறது.


அதாவது, “மூலக்கூறு இயந்திரங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்காக” இவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் அகாடமி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே மருத்துவ மைக்ரோ-ரோபோக்கள் வடிவமைப்பிலும் வெளி சிக்னல்களுக்கு வினையாற்றும் சிறு இயந்திரங்கள் வடிவமைப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தை கையடக்கமாக சிறிய அளவினதாக மாற்றியது தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டதை கணினி நமக்கு அறிவுறுத்துகிறது. 2016 வேதியியல் நோபல் அறிவிக்கப்பட்ட இந்த 3 விஞ்ஞானிகளும் இயந்திரங்களை சிறிய அளவினதாக்கி வேதியியலை புதிய பரிமாணத்திற்குக்கொண்டு சென்றனர்.

ரசாயன ஆற்றலை இயந்திர ஆற்றலாக உருமாற்றும் கட்டுப்படுத்தக்கூடிய நேனோ-மீட்டர் அளவுள்ள அமைப்புகளை இந்த மூன்று விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கினர். இதனையடுத்து இவர்களால் சுவிட்ச்கள், மோட்டார்கள், மூலக்கூறு மோட்டார் காரை ஒத்த வடிவமைப்பு உட்பட எண்ணற்ற சிறிய மூலக்கூறு இயந்திரங்களைக் கட்டமைக்க முடிந்தது.

இதன் மூலம் தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் பொருள்களை விஞ்ஞானிகள் வடிவமைக்க இந்தக் கண்டுபிடிப்புகள் வித்திட்டது. உதாரணமாக உஷ்ணத்திற்கேற்ப சுருங்குவது அல்லது உடலில் நோய்ப்பகுதியை குறிவைத்து மருந்துகள் இயங்குவதற்கான திறப்புகள் போன்றவைகளைக் கூறலாம்.

இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் பேராசிரியர், மார்க் மயோடோவ்னிக் கூறும்போது, இந்த நேனோ இயந்திரங்கள் கண்டுபிடிப்பினால் பொறியியளாளர்கள் அதுவாகவே பழுது பார்த்து கொள்ளும் நகரங்களை இயற்கை உலகுடன் ஒப்பிடக்கூடிய ஒன்றை உருவாக்க முடியும்.

தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும் உள்கட்டமைப்பை விரும்புகிறீர்களா? இந்தக் கண்டுபிடிப்புகளின் மூலம் தானாகவே குணப்படுத்திக் கொள்ளும் தானாகவே தகவமைத்து கொள்ளும் அமைப்புகளை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம். நம்மிடையே தானாகவே பழுது பார்த்துக்கொள்ளும் பிளாஸ்டிக் பைப்புகள் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளது. எனவே நேனோ-மெஷின்கள் அல்லது மூலக்கூறு இயதிரங்கள் முழு பயன் மேலதிகமானது” என்றார்.   tamilthehindu.com

கருத்துகள் இல்லை: