செவ்வாய், 4 அக்டோபர், 2016

டெல்லி:அதிமுக எம்பிக்களின் அதிர்ச்சி!..

minnambalam,com காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அதிமுக-வின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுக எம்.பி. தம்பிதுரை தலைமையில் நாடாளுமன்றம் முதல் பிரதமர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் பிரதமரைச் சந்திக்க முயன்றபோதிலும் அவர்களை பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், தாங்கள் எடுத்துச் சென்ற மனு ஒன்றை பிரதமர் அலுவலகச் செயலரிடம் கொடுத்திருக்கிறார்கள் அதிமுக உறுப்பினர்கள். அந்த மனுவில், “இந்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தால் ஆனது. இந்த அமைப்பில் மத்தியில் ஆளும் அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது, உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பின்பற்றுவது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற கர்நாடகாவின் நிலைபாட்டுக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர்கள் துணை நிற்கிறார்கள். இது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனப்படி, மத்திய அமைச்சராக இருப்பவர்கள் நடுநிலையாகவே செயல்பட வேண்டும். ஆனால் கர்நாடக அமைச்சர்களின் நடவடிக்கை தமிழக மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு உச்சநீதிமன்றத்தில், மத்திய நீர்வளத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து 10 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: