வியாழன், 6 அக்டோபர், 2016

ஜெயலலிதா உடல்நிலை பற்றி புகைப்பட ஆதாரத்தை எப்படி கேட்க முடியும்?: டிராபிக் ராமசாமிக்கு ஐகோர்ட் கண்டனம்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பற்றி பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவுகின்றன. இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான பதட்டம் நிலவுகிறது. வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதே நேரம், தமிழக அரசு இதுநாள் வரை ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா அதிகாரிகளுடன் காவிரி விவகாரம் குறித்து விவாதித்தார் என்று தமிழக அரசு பத்திரிகை செய்தி வெளியிட்டாலும், அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடவில்லை.


அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் மட்டும் அவ்வப்போது, ஜெயலலிதாவின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிடுகிறது.

இதனால் மக்கள் மத்தியில் ஒரு விதமான குழப்பமும், பதட்டமும் ஏற்படுகிறது. எனவே, முதல்அமைச்சர் உடல் நலம் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளுடன் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய அரசுப் பணிகள் எல்லாம் நின்று விட்டது. அதனால், அந்த பணிகளை மேற்கொள்ள தற்காலிக முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்தார்.

இதனால், சென்னை ஐகோர்ட்டில் அவர் விசாரிக்க வேண்டிய பொது நல வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், மகாதேவன் ஆகியோர் முன்பு கடந்த செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது. அவரது அந்தரங்க வி‌ஷயங்களை எல்லாம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், 'முதல்-அமைச்சர் என்பதால் அவரது உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஒரு விருப்பம் ஏற்படுவது வழக்கம்தான். எனவே, உடல் நலம் குறித்து தமிழக அரசு ஏன் விளக்கம் அளிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, தன் வழக்கு குறித்து வாதம் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அடிக்கடி முதல்- அமைச்சர் உடல் நலம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கு மேலும் மனுதாரர் பல விதமாக கோரிக்கை முன் வைக்கிறார்’ என்று வாதிட்டார். பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவ அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்தனர். ‘ஒரு முதல்-அமைச்சர் உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அவரது உடல் நலம் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எப்படி கேட்க முடியும்? உங்களது அரசியல் விளையாட்டுக்கெல்லாம் இந்த ஐகோர்ட்டை மேடையாக்காதீர்கள்’ என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இது பொது நல வழக்கு இல்லை. பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக தாக்கல் செய்த மனு. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்  maalaimalar.com

கருத்துகள் இல்லை: