செவ்வாய், 4 அக்டோபர், 2016

BBC.COM :தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இம்மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது< சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப் படம்) >தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 25- ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கலும் துவங்கியது.
இந்நிலையில், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படவில்லையென திமுகவின் சார்பில் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், இந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுவதாகவும், டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 24-ஆம் தேதியோடு முடிவடைவதால், அதற்குப் பிறகு, தனி அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க வேண்டுமென்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே, வேட்புமனுத் தாக்கல் துவக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
எந்தத் தொகுதிகள், எந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகின்றன என்ற விவரம் ஆளும் கட்சிக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சியினருக்கு அந்த விவரங்கள் தெரியாது என்பதால், சரியான ஆட்களை குறுகிய காலகட்டத்திற்குள் தேர்வு செய்ய முடிவதில்லை என்றும் அவை குறைகூறி வந்தன.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்களின் பரிசீலனை நடைபெற்று வந்தது.

கருத்துகள் இல்லை: