வியாழன், 6 அக்டோபர், 2016

தா.பாண்டியன் : முதல்வர் தற்போது பேசும் நிலையில் இல்லை !

Don’t believe rumors, says Tha.Pandianசென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், அதிமுகவினர் யாரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் மனநிலை பாதிக்கப்படும் அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.< முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்து கொள்வதற்காக முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றர். இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தா.பாண்டியன், முதல்வரை சந்திக்கவில்லை என்றும் அவர் தற்போது பேசும் நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, ஏராளமானோர் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர். அப்போது ஜெயலலிதா அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டார். இன்றைக்கு ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன.
இந்த வதந்திகளை யாரும் நம்பக் கூடாது. மேலும் மேலும் பரப்பக் கூடாது. முதல்வரின் உடல்நிலை பற்றி தேவையற்ற வதந்திகள் பரவுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. இப்போது முதல்வர் பேசும் நிலையில் இல்லை எனவே அவர் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன் யாரும் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். முதல்வர் ஆரோக்கிய நிலையை எட்டிவிட்டாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியதாகவும் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: