வியாழன், 6 அக்டோபர், 2016

அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !

ஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா? அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா?
மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது ஏன்? இன்று வரை இந்தக் கேள்விக்கான பதில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடும் அதிகாரப் பூர்வ செய்தி அறிக்கைகளில் தள்ளாடுகிறது. ஆரம்பத்தில் நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல், இரண்டாம் நாளிலேயே வழக்கமான உணவு எடுக்கிறார் என்று கூறியது பிரதாப் ரெட்டியின் மருத்துவமனை.
சரி, ஏதோ சாதா காய்ச்சல் அதற்கு சிறப்பு சிகிச்சை எடுக்க சென்றிருக்கிறார் என்றார்கள். பிறகு முழு பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக மேலும் சில நாட்கள் இருப்பார் என்றார்கள். கடைசியில் லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர், தில்லியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு வந்தது. சாதா காய்ச்சலுக்கு ஏன் லண்டன், தில்லி சிறப்பு மருத்துவர்? என்றால் பதிலில்லை.
ஊடகங்களைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கையில் இருப்போரின் மருத்துவப் பிரச்சினைகள் தனிப்பட்ட விசயம், அதை பொது வெளியில் பகிர்வது தேவையற்றது என்பது நிலைப்பாடாம். இதை தந்தி பாண்டே முதல் இந்து தலையங்கம் வரை உபதேசிக்கிறார்கள். கூடவே “இருப்பினும் மக்களின் சந்தேகங்கள் போக்கப்படவேண்டும்” என்று பயந்து கொண்டே ஒரு பின் குறிப்பு போடுகிறார்கள்.

நோயே தெரியாமலல் சிகிச்சை விவரங்கள் எதற்கு?
நோயே தெரியாமலல் சிகிச்சை விவரங்கள் எதற்கு?
உடனே “அம்மா நலமாக இருக்கிறார், எந்தப் பிரச்சினையும் இல்லை, வதந்திகளை நம்பாதீர்கள்” என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. நம்புகிறார்கள், நம்மையும் நம்பச் சொல்கிறார்கள்.
இது போக திருமாவளவன் துவங்கி தா.பா கட்சியினர் வரை அப்பல்லோவின் முதல் தளம் சென்று அ.தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து “ஆமாம், அம்மா நலம்தான்” என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஆளுநருக்கு மட்டும் மருத்துவர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அண்ணா சாலையின் கிரீம்ஸ் சாலை பிரிவில் துவங்கி, அப்பல்லோ இரண்டாம் தளம் வரை பத்து கட்ட பாதுகாப்பு, தடையரண்களை போலீசு ஏற்படுத்தி அங்கேயே முகாமிட்டிருக்கிறது.
அம்மா கொடநாடு சென்றால் கூடவே செல்லும் தமிழக அரசின் உயரதிகாரிகள் இப்போது அப்பல்லோவில். ஊடக செய்தியாளர்களுக்கு உணவும், நீரும் கொடுத்து கூடவே செய்திகளையும் அளிக்கிறது தமிழக செய்தித்துறை.
டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் தைரியமாக முந்தாநாள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம், இது பொது நல வழக்கு அல்ல, பொது விளம்பர வழக்கு என இன்றைக்குக் கண்டுபிடித்திருக்கிறது.
தமிழக சட்டமன்றம் என்றாலே விதி எண் 110 என்றாக்கினார்கள். அம்மா இருக்குமிடம் போயஸ் தோட்டமோ இல்லை கொடநாட்டு தோட்டமோ அதுதான் தலைமைச் செயலகம் என்று அதிகாரிகள் அங்கே நின்றார்கள். இதை யாராவது எழுதினால் அவதூறு வழக்கு. பாயும் என்பதை நிலை நிறுத்தினார்கள்.
அம்மா இருக்குமிடம்தான் அதிகாரிகள், போலீஸ் இருப்பிடம்!
அம்மா இருக்குமிடம்தான் அதிகாரிகள், போலீஸ் இருப்பிடம்!
தமிழக செய்தி ஒலிபரப்பு விளம்பரத் துறை ஃபோட்டோ ஷாப் படங்களோடு அம்மா ஆட்சி மகிமைகளை எடுத்துரைத்தது. ஜெயலலிதாவின் ஆட்சி என்பது என்றுமே மர்மமான ஆட்சிதான். மன்னார் குடி கும்பல், உளவு-போலீசு அதிகாரிகள், சோ முதலான பார்ப்பனக் கும்பல் ஆகியோர் மட்டும்தான், ஆகம விதிப்படி அம்மா அமர்ந்திருக்கும் கர்ப்ப கிருகத்துக்குள் நுழையும் அதிகாரம் படைத்தவர்கள். அம்மா இட்லி முதல் எலைட் பார் வரை எல்லா கொள்கை முடிவுகளும் அங்கேதான் எடுக்கப்படும். வெங்கய்யா நாயுடு, ஜெட்லி, மோடி, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட இயற்கைக் கூட்டாளிகளுக்கு மட்டும் ஸ்பெசல் தரிசனம் அனுமதிக்கப்பட்டது.
இப்போது கருவறையில் நுழைவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெறும் இடத்தில் சசிகலா, இளவரசி போன்றோர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பிறகு பிரதாப் ரெட்டி மற்றும் பிற மருத்துவர்களை அனுமதிப்பதை தவிர்க்க இயலாது என்பதால் அனுமதிக்கப்படுகிறார்கள். ஸ்பெசல் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள் எல்லாம் பத்தாவது கட்ட பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே சூடம் கொளுத்தி, சாமியாடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, “என்ன, அம்மா நிலவரம் பற்றி ஏதாவது தெரியுமா? நான் கேட்டேன்னு சொல்லிடாதீங்க என்று பத்திரிகையாளர்களிடம் பணிவோடு விசாரிக்கிறார்கள்.“ காபினெட் என்று அழைக்கப்படும் கூட்டம், பகல் எல்லாம் கிரீம்ஸ் ரோடு பரோட்டாக் கடை ஓரமாக தேவுடு காத்து விட்டு, இருட்டிய பின் ஏ.சி ரூமுக்கு தூங்கப் போய்விடுகிறது.
மண் சோறு மகாத்மியங்களெல்லாம் வரலாற்றில் இடம் பெறும் அதிசயம்!
மண் சோறு மண்ணாங்கட்டிகளெல்லாம் வரலாற்றில் இடம் பெறும் அதிசயம்!
இப்படியான சூழ்நிலயில் உள்ளாட்சித் தேர்தல் முடிவை எடுத்தது யார்? அதற்கு அதிமுக வேட்பாளர்களைத் தீர்மானித்தது யார்? தடை விதித்திருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதென முடிவு செய்தது யார்? காவிரி வழக்கில் மோடி அரசு செய்துள்ள அயோக்கியத்தனத்தை கண்டு கொள்ளாமல் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவு செய்திருப்பது யார்?
ஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா? அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா?
தமிழ்நாடு இயங்குகிறது. தமிழர்கள் எல்லோரும் முறையாக பல் விளக்கி, காலைக்கடன் கழிக்கிறார்கள். அம்மா உணவகத்தில் இட்லி தின்கிறார்கள். டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காவிரியில் தமிழகத்தின் முதுகில் குத்திய பின்னரும், பாரதிய ஜனதாக் கட்சியின் “ஜி” க்கள் அனைவரும் அச்சமின்றி சந்தோசமாக நடமாடக்கூடிய அமைதிப்பூங்காவாக தமிழகம் இருக்கிறது. அம்மா நலமாக இருக்கிறார் என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?
விடுங்கப்பா! அறை எண் 2008 இல் கடவுள் இருக்கிறார்  vinavu.com

கருத்துகள் இல்லை: