வெள்ளி, 7 அக்டோபர், 2016

ரூ.5,700 கோடியில் மேக்கேதாட்டு அணை திட்டம் தயார்

sidharamaya காவிரிப் பிரச்னை முடிவதற்குள் தமிழகத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.5,700 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்துள்ளது கர்நாடகம். இதுகுறித்து மைசூரில் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மேக்கேதாட்டு அணையை ரூ.5,700 கோடியில் கட்டுவதற்கான திட்ட விவர அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதும், பணிகள் தொடங்கப்படும். மேக்கேதாட்டு அணையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை விட்டுவிட்டு எஞ்சியுள்ள நீரைச் சேமித்து, பெங்களூரு மக்களின் குடிநீர் விநியோகத்துக்கு மட்டுமின்றி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும்.

நிவாரணம்
காவிரி நதிப் படுகையில் 18.85 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி உள்ளது. இதில் 6.15 லட்சம் ஏக்கரில் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. ஹேமாவதி அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாததால், 1.8 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகின.
வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பவிருக்கிறோம். 110 வட்டங்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் சில வட்டங்கள் இணைக்கப்படும்.
வேண்டுகோள்
வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் கடன் தொல்லையால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. வங்கியில் பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் அளிப்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும்.
பயிர்க் கடன் நிலுவைத் தொகையை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் வசூலிக்க வேண்டாம் என்றும் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுகுறித்து பிரதமர் மோடியைச் சந்தித்து முறையிடவும் முடிவு செய்திருக்கிறேன்.
பேச்சுவார்த்தைக்குத் தயார்வரும் 21-ஆம் தேதி மும்பையில் கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வர்களுடன் மகதாயி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதேபோல, கிருஷ்ணா, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம் என்றார்.   dinamani.com

கருத்துகள் இல்லை: