mohan-bhagwat-2 இந்துமதத்தின் எந்த அம்சங்களையும் அறியாமல், ஏற்காமல் வாழும் பழங்குடி மக்களும், வருண அமைப்பின் வெளியே தூக்கி எறியப்பட்ட பஞ்சம மக்களும், சாதிக்குள்ளே அடிமைகளாக இழிவு படுத்தப்படும் சூத்திர மக்களும் வாழும் இந்தியாவில் யார் இந்து? அவாள்களும், ஷத்திரிய, வைசிய, பனியா சாதிகளை தவிர்த்துப் பார்த்தால் இந்தியாவில் இந்துக்கள் அல்லாதோர்தான் பெரும்பான்மையினர்.
மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத் பேசியதை “ஏன் இந்துக்களாக இருக்க முடியாது?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்.
அதில் “இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும் போது, இந்தியாவில் வசிப்போர் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இந்த நாட்டில் இந்துக்களிடையே சமத்துவத்தை உருவாக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
அனைத்து இந்துக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் நடந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொன் விழாவில் மோகன் பாகவத் பேசிய”தாக பூரிக்கிறது தினமலர். தாமரை நாடாண்டால் காவி வெறியர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்.
இது ஒன்றும் புதிதல்ல. சாவர்கர், ஹெட்கேவார், கோல்வால்கர் முதல் இராம கோபாலன், அசோக் சிங்கால் வரை ஆயிரக்கணக்கான இந்துமதவெறியர்கள் அனைத்து மொழிகளிலும் இந்த மிரட்டலை பேசாத நாளில்லை. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆளும் காலத்தில் சட்டபூர்வ இந்துராஷ்டிர அமலாக்கம் நடந்து வரும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பது வெறும் கருத்தல்ல. அமலுக்கு வரும் ஒரு துவக்கம்.
ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? என்பது கேள்வியல்ல, ஏற்றுக் கொள்ளாவிட்டால் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தினை அறிவிக்கும் மிரட்டல். இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசும் போது இந்தியாவில் சமஸ்கிருதமோ இல்லை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியோதான் பேச வேண்டும் என்பதும், அதற்கான துறை சார் உத்திரவுகளை பாஜக அரசு பிறப்பித்திருப்பதும் வேறு வேறு அல்ல. மற்ற இந்திய மொழிகள் அவாளின் புனித மொழிக்கு கட்டுப்பட்டே காலந்தள்ள வேண்டும் அல்லது ஒழிந்து போக வேண்டும்.
அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படுவது ஒரு இடம் சார்ந்த நாட்டின் குறியீடே அன்றி பண்பாடு, மொழி, சமூகவியல், மதம் சார்ந்த ஆதிக்கத்தின்பாற்பட்டதல்ல. இத்தனைக்கும் அங்கே கிறித்தவமே அதிகாரப்பூர்வமற்ற அரச மதமாகவம், வெள்ளை நிறவெறியே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செய்யும் நிலைமை இருந்தாலும் சட்டபூர்வமாகவும், பொதுப்புத்தியின் கருத்தளவிலும் அங்கே பெரும்பான்மையினரின் மதம் சார்ந்த பண்பாடு “அமெரிக்கனிசமாக” முன்னிறுத்தப்படுவதில்லை.
இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பேசும் இந்து வெறியைப் போன்றே ஆரிய இனவெறியை உயர்த்திய ஹிட்லரும் பேசினான். ஆனால் அதை ஜெர்மனிய மக்கள் இன்று வரையும் ஒரு குற்றவியல் கொடூரமாகவே கருதுகிறார்கள். அதனால்தான் புதிய நாசிசக் கட்சிகள் கூப்பாடு போடும் போதெல்லாம் பெரும்பான்மையான ஜெர்மனிய மக்களும் அவர்களை எதிர்த்து போராடுகிறார்கள். இந்தியாவிலோ அந்த நாசிசம் ஆண்டு கொண்டிருக்கிறது. இதன்படி ஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிட்டால் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. சரியாகச் சொன்னால் இந்துமதவெறியர்களின் பாசிசத்தை கண்டு உலக நாடுகள் காறித் துப்பலாம். இந்த கேவலத்தின் விளைவால்தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்துமதத்தின் எந்த அம்சங்களையும் அறியாமல், ஏற்காமல் வாழும் பழங்குடி மக்களும், வருண அமைப்பின் வெளியே தூக்கி எறியப்பட்ட பஞ்சம மக்களும், சாதிக்குள்ளே அடிமைகளாக இழிவு படுத்தப்படும் சூத்திர மக்களும் வாழும் இந்தியாவில் யார் இந்து? அவாள்களும், ஷத்திரிய, வைசிய, பனியா சாதிகளை தவிர்த்துப் பார்த்தால் இந்தியாவில் இந்துக்கள் அல்லாதோர்தான் பெரும்பான்மையினர்.
‘சூத்திர’ பத்திரிகையான தினத்தந்தி, மோகன் பகவத்தின் பேச்சை சர்ச்சை என்று தலைப்பில் போட்டிருந்தாலும் உள்ளே அவர் பேசியதை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறது.
“இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா (இந்து மதம்) அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய மதம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்”.
இந்த சமத்துவத்தை ஏற்காதோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் குடும்ப இயக்கங்களில் இருக்க முடியாது என்று ஏன் அமல்படுத்தவில்லை? தீண்டாமையை ஏற்காதவன் மட்டுமே காங்கிரசில் இருக்க முடியும் என்று அறிவிக்க முடியுமா என்று காந்திக்கு சவால் விடுத்தார் அம்பேத்கர். அந்த சவாலை காந்தி முதல் சங்க பரிவாரங்கள் வரை இப்படித்தான் கள்ளத்தனமாக எதிர் கொள்கிறார்கள்.
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்? ஒரு வேளை கிராமங்களில் அப்படி இல்லை என்றால் அந்த இல்லாமைக்கு என்ன காரணம்?
நிலவுடைமையிலும், பொருளாதாரத்திலும் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் தலித் மக்களை விடுவிக்காமல் இந்த சமத்துவம் சாத்தியமில்லை. இது இந்து மதவெறியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆனால் விரும்பாத ஒன்று. காரணம் சங்க வானரங்கள் அனைத்தும் கொள்கையில் மட்டுமல்ல, கட்டமைப்பிலும் ஆதிக்க சாதிகளை சார்ந்தே உயிர் பிழைத்து வருகின்றன. தேவைப்படும் போது சிறுபான்மை மற்றும் சூத்திர-தலித் மக்களின் உயிரை எடுத்தும் வருகின்றன.
சென்னையில் இவர்கள் நடத்திய ஆன்மீக கண்காட்சியில் தலித் மக்களை ஒடுக்கும் எல்லா சாதிவெறியர்களுக்கும் இடம் கொடுத்துவிட்டு, உத்திர பிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை முசுலீம்களுக்கு எதிராக திருப்பி இந்துவெறியாக மாற்றி தேர்தலில் வெற்றி பெற்று இரத்தம் சுவைத்த ஓநாய்கள் இப்படி வெட்கமில்லாமல் சைவப்புலிகளாக நாடகமிடுகின்றன.
மகாராஷ்டிரத்திலும், ஹரியானாவிலும் வர இருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் தலித்களின் வாக்குகளை அள்ளுவதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வாய் தனக்கு எதிரான சமத்துவத்தை வேண்டா வெறுப்பாக கதைக்கிறது. மராட்டியத்தில் இந்துமதவெறியர்களோடு தலித் கட்சிகளை கூட்டணியில் இணைப்பதோடு (இது ஏற்கனவே நடக்கும் ஒன்றுதான்) மக்களின் வாக்குகளை கவருவதற்கும் இந்த நாடகம் தேவைப்படுகிறது.
அரியானா எனும் இந்தி பேசும் மாநிலத்தில் தலித்துக்களுக்கு எந்த இடமும் அரசியலில் இல்லை என்றாலும் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருக்கும் அவர்களை, கொத்தாக கைப்பற்றுவதற்கும் இந்த நாடகம் அரங்கேறுகிறது.
முசுலீம்களை எதிர்ப்பதும், ஆதிக்க சாதிவெறியை ஆதரிப்பதும் இந்தியாவெங்கும் இருந்தாலும் இப்படி தலித் மக்களை அரவணைப்பது போல நடிப்பது ஆர்.எஸ்.எஸ்-க்கு தேவைப்படுகிறது. ஆனால் அது நாடகமென்பதை தினமலரின் தலைப்பு சொல்லும் போது அரவிந்தன் நீலகண்டன் போன்று இதயத்தில் ஆதிக்க சாதிவெறியான இந்துத்துவத்தை மறைத்து விட்டு தலித் வேடமிடும் கபடதாரிகள் புரட்சி என்று வரவேற்பார்கள்.
போர்த்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போர்த்தினாலும் இந்து மதவெறியர்களின் ஆன்மா சாதிவெறி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை.  தேவையெல்லாம் அதை முறியடிப்பதே! vinavu.com