வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மக்கள் நல பணியாளர் தீர்ப்பு ! மேல்முறையீடு செய்யின் கொடுமை ! ஏழை அழுத கண்ணீர் கூரிய வாழை ஒக்கும் !

சென்னை : 'மக்கள் நலப் பணியாளர்களுக்கு, உயர் நீதிமன்ற உத்தரவுபடி பணி வழங்காமல், கால தாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், மேல் முறையீடு செய்ய முற்பட்டால், அது கொடுமையானது' என, தி.மு.க., தலைவர் கலைஞர்  கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி தராமல், மூன்றரை ஆண்டுகளையும், அ.தி.மு.க., அரசு வீணடித்ததோடு, உச்ச நீதிமன்றம் வரை அவர்களை இழுத்தடித்து, படாதபாடு படுத்தியிருக்கிறது. இதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் கடுமையான கண்டனத்தை, தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர். மக்கள் நலப் பணியாளர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என, உறுதியாக கூறியுள்ளனர். இதுவரை, 19 பணியாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பதையும், வேலையிழந்த பணியாளர்களில், பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் நினைவில் கொண்டு, இனியும் காலதாமதம் செய்யாமல், தமிழக அரசு, உடனடியாக அவர்களுக்கு, வேலை தர வேண்டும். காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேல் முறையீடு செய்ய முற்பட்டால், அதைவிடப் பெரிய கொடுமையோ, அநீதியோ, வேறு எதுவும் இருக்க முடியாது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: