செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

திரைப்பட தணிக்கை குழுவினர் லஞ்சம் கேட்கின்றனர் ? மத்திய தணிக்கை குழுத்தலைவர் இப்போ மாட்டினார் ஏனையோர் விரைவில் ?

திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட
மத்திய தணிக்கை வாரிய தலைவர் கைது இந்திய ரெயில்வே பணியாளர் அதிகாரியான ராகேஷ் குமார், கடந்த ஜனவரி மாதம், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ‘மோர் தாகி கே பிகாவ்’ என்ற சத்தீஷ்கார் மாநில மொழிப்படம், தணிக்கைக்காக ராகேஷ் குமாரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்படம், ஆகஸ்டு 15-ந் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், அதற்கு அவசரமாக தணிக்கை சான்றிதழ் பெற படத்தயாரிப்பாளர் விரும்பினார். அப்படியானால், ரூ.70 ஆயிரம் லஞ்சம் தருமாறு, ஸ்ரீபதி மிஸ்ரா என்ற ஏஜெண்டு மூலமாக ராகேஷ் குமார் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தணிக்கை வாரியத்தின் மற்றொரு ஏஜெண்டு, சி.பி.ஐ.யில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 14-ந் தேதி ராகேஷ் குமார் சார்பில் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா, தணிக்கை வாரியத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் ரூ.70 ஆயிரத்தை வாங்கியபோது, இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர்.
மேலும், தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில், அவர் லஞ்சம் கேட்டதற்கு, முதல் நோக்கிலேயே ஆதாரம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, மும்பையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமாரை நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், தான் லஞ்சம் வாங்கிய மேலும் பல தயாரிப்பாளர்களின் பெயர்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.nakkheeran.in 

கருத்துகள் இல்லை: