புதன், 20 ஆகஸ்ட், 2014

அர்ச்சனா ராமசுந்தரம் வழக்கில் மத்திய அரசு முடிவை விரைவில் அறிவிக்க நீதிமன்ற உத்தரவு !

புதுடெல்லி
சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமனம் செய்தது தொடர்பான வழக்கின் விசாரணையை அக்டோபர் 14–ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. இதனால் அவர் பதவி வகிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கிறது.
பணியிடை நீக்கம் தமிழக காவல்துறையில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர், அர்ச்சனா ராமசுந்தரம். இவரை கடந்த பிப்ரவரி 7–ந் தேதி சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. தமிழக அரசு விடுவிக்காத நிலையில், தமிழக அரசு பணியில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு டெல்லி சென்று சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அவர் பொறுப்பேற்றார்.

இதனால் அர்ச்சனா ராமசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை இந்த நிலையில் வினித்நாராயண் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்தில் மத்திய அரசு தேவையான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இந்த பதவிக்கான அதிகாரியை நேரடியாக நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரமும் இல்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பதவி வகிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 9–ந் தேதி இடைக்கால தடை விதித்தது.
கடந்த ஜூலை 21–ந் தேதி நடந்த விசாரணையின்போது, தமிழக அரசின் பதில் மனுவின் மீதான எதிர்பதில் மனுவை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம், பணியாளர், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சார்பிலும் சில நாட்களுக்கு முன்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசும் தன்னுடைய எதிர்பதில் மனுவை தாக்கல் செய்தது.
சட்டப்பூர்வமானதுதான் இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ‘‘தமிழக அரசு 2013–ம் ஆண்டு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பணியில் சேர அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்துக்கு தமிழக அரசு 3 மாதங்களாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த அமைதியை மத்திய அரசு ஒப்புதலாக கருதி அதன் அடிப்படையில் அவரை பணியில் சேர மத்திய அரசு உத்தரவிட்டது. இது முற்றிலும் பணிவிதிகளுக்கு உட்பட்டே செய்யப்பட்டது. இது சட்டபூர்வமானது’’ என்று குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கேள்விதமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தே, 2013–ம் ஆண்டில் தமிழக அரசு மத்திய அரசின் பணிக்கு தகுதியானவர்கள் என்று மூன்று அதிகாரிகள் அடங்கிய பட்டியலைத்தான் அளித்தது. அதனை ஒப்புதல் என்று கருத முடியாது. தமிழக அரசு பணியில் இருந்து முறைப்படி விடுவித்தால்தான் அந்த அதிகாரி மத்திய அரசு பணியில் சேரமுடியும் என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், சி.பி.ஐ. உயர் அதிகாரிகளை நியமிக்க அமைக்கப்பட்டுள்ள குழு பஞ்சானந்தா என்ற அதிகாரியின் பெயரை பரிந்துரை செய்த நிலையில் பரிந்துரைக்கப்படாத அர்ச்சனா ராமசுந்தரத்தை எப்படி நியமித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
ஒத்திவைப்பு மேலும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தேவையின்றி ஒரு அதிகாரி பாதிப்பு அடைகிறார். அவரை தமிழக அரசு ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவர் இந்த நியமனத்தில் இருந்து வாபஸ் பெற விரும்பினாலும் மத்திய அரசு ஒருமுறை பணியிடை நீக்கம் செய்யும். எனவே மத்திய அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு 4 வாரத்துக்குள் தங்கள் முடிவை தாக்கல் செய்வதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தடை நீடிப்பு இதனையடுத்து, நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை அக்டோபர் 14–ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனால் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் பதவி வகிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கிறது. dailythanthi.in

கருத்துகள் இல்லை: