வெள்ளி, 6 ஜூலை, 2012

Besant Nagar பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடனும்

பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி :
உயிருக்குப்பயந்து பயணிகள் அலறல்
சென்னை பெசன்ட் நகரிலிருந்து சுங்கச்சாவடிக்கு சென்று கொண்டிருந்த பஸ்சில் (6டி), மாநில கல்லூரி மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர் ஏறினர். கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் ஆக்ரோஷமாக ஏறியதால், பயணிகள் அலறினர்.
சத்தம் போட்டால் அடி விழும் என, மிரட்டிய மாணவர்கள் யாரையோ பஸ்சில் தேடினர். அப்போது, பல மாணவர்கள் பஸ்சின் மேல் கூரையில் ஏறுவதும், கீழே இறங்குவதுமாக பயணிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால், வள்ளலார் நகருக்கு செல்ல வேண்டிய பல பயணிகள் பாதியிலேயே, ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓடினர்.
பஸ்சின் உள்ளே தைரியமாக உட்கார்ந்திருந்த சிலரும், மாணவர்கள் உள்ளே ஆடிய ஆட்டத்தால் பயந்து அலறினர். பஸ் வள்ளலார் நகர் வந்த போது, பஸ்சில் மாணவர்களின் அடாவடி அதிகரிக்கவே, சாலையோரம் நின்றவர்கள் இதை பார்த்துவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 அருகில் போலீஸ் நிலையம் இருந்தும், 25 நிமிடம் கழித்து ஒரே ஒரு போலீஸ்காரர் வந்து, ஒரு ஓரமாக நின்று, மாணவர்களின் அடாவடியை வேடிக்கை பார்த்தார். அதன் பிறகு, மாணவர்கள் அவர்களாகவே பஸ்சில் எதையோ சாதித்துவிட்டு வருவது போல், ஹாயாக நடையைக் கட்டினர். போலீஸ்காரர் அங்கு எதுவுமே நடக்காதது போல, அவரும் அங்கிருந்து ஹாயாக திரும்பிச் சென்றார்.
பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், "சென்னையில் பஸ்சில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது.பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். படிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, இப்படி அடாவடி செய்வதில் தான் தங்களுக்கு இஷ்டம் என்பது போல நடந்து கொள்வதை பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது,'' என வருத்தத்துடன் கூறினார்.
இதுகுறித்து, பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், ""ஒவ்வொரு முறையும் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது, ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவது போன்றவை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, மாணவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நேரங்களில் அவர்களின் கல்வி பாதிக்கப்படுமே என்று, தண்டனையை தவிர்ப்பது மாணவர்கள் மேலும் தவறு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்துவிடும் என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வது முக்கியம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: