வியாழன், 5 ஜூலை, 2012

கேரளம், குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம்

 Kerala Is Country S Most Crime Prone State Statistics
டெல்லி : இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம், கடவுளின் சொந்த இடம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வந்த கேரளம் இனி, குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம் என்ற அடைமொழியையுடன் அழைக்கப்பட உள்ளது என்பதை தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் அண்மைய தகவல்கள் கூறுகின்றன.
நாடுமுழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு, கடத்தல், வரதட்சணை மரணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குற்றவியல் புள்ளி கணக்கிடப்படுகிறது. குற்றவியல் புள்ளி என்பது ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு அங்கு நடைபெறும் குற்றவியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிப்படுவதாகும். அதிக மக்கள் தொகை உடைய மாநிலம் குறைவான மக்கள் தொகை உடைய மாநிலத்தைவிட அதிக குற்றங்களை உடைய மாநிலமாக இருக்கக் கூடும். ஆனால் குற்றவியல் புள்ளி சராசரியாகக் கணக்கிடப்படுகிறது.
அது அந்த மாநிலத்தின் அல்லது நகரத்தின் சட்டம் ஒழுங்கை பறைசாற்றுவதாகவும் அமையும்.
இந்தியாவிலேயே மிகப்பெரும் மாநிலமான உத்திரப் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, குற்றச் செயல்களில் முதன்மை மாநிலமாக கேரளா திகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாடுமுழுவதும் 2,41,986 மோசமான குற்றங்கள் பதிவாகி உள்ளன. அதில் கேரளாவில் 11,756 குற்றங்களும், ராஜஸ்தானில் 10,577 குற்றங்களும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 12,333 குற்றங்களும், ஆந்திராவில் 12,491 குற்றங்களும் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில் 27,225 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மக்கள் தொகையை கணக்கிடும் போது கேரளாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.
குற்றவியல் புள்ளியில் 424.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ள கேரளாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும். இம்மாநிலத்தின் குற்றவியல் புள்ளி 297.2 ஆகும். மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியின் புள்ளி 279.8 ஆகும். நாட்டிலேயே குற்றங்கள் அதிமாக நடைபெறும் மாநிலமாகச் சித்தரிக்கப்பட்டு வரும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் குற்றவியல் புள்ளி 87.5 மட்டும்தான் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. மாநிலத்தின் மக்கள் தொகைக் கணக்கின் படியும் 2010ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட குற்றச் செயல்களின் படியும் குற்றச் செயல்களால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது.
கேரள மாநிலத்தின் துறைமுகம் மற்றும் வணிக நகரான கொச்சி மிக ஆபத்தான நகராகவும் உள்ளது. நாட்டின் குற்றவியல் புள்ளி சராசரி 187.6. ஆனால் கேரளாவின் குற்றவியல் புள்ளி இரண்டு மடங்கை விட அதிகமாக அதாவது 424.1ஆக உள்ளது. 2009ஆம் ஆண்டின் தகவல்களுடன் 2010ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கொச்சி நகரின் குற்றவியல் எண்ணிக்கை 193 சதவீதம் அதிகரித்துள்ளது.அதேபோல் பெண்களுக்கும் கேரளாவில் பாதுகாப்பு இல்லையாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 27 பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 24.6 சதவிகிதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பீகார், மற்றும் கோவாதான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. அங்கு வெறும் 8 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: