சனி, 31 டிசம்பர், 2011

சீன துணை தூதர்:இந்தியாவுடன் 99.99 சதவீதம் நட்பும், 0.1 சதவீதம் புரிந்துக் கொள்ளாமையும் உள்ளது

இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.

இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா - சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.
இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல.

கி.பி., முதலாம் நூற்றாண்டு முதல் இரு நாடுகளுக்கும் நட்புறவு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த "காஷ்யப்பர் மதாங்கர்', "தர்மரங்கா' சீனா வந்தனர். ஐந்தாம் நூற்றாண்டில் "போதிதர்மர்' வந்து, ஜென் புத்திசத்தை ஆரம்பித்தார். இவர் எப்படி வந்தார் என்பது குறித்த கதை இன்றும் சீனாவில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில், சீனாவில் இருந்த புத்ததுறவிகள் இந்தியா வந்தனர். யுவான்சுவாங் பத்தாண்டுகள் இங்கிருந்து, சமஸ்கிருத புத்த பாடங்களை சீனாவுக்கு மாற்றினார். இரு நாடுகளுக்கும் இடையே 99.99 சதவீதம் நட்பும், 0.1 சதவீதம் புரிந்துக் கொள்ளாமையும் உள்ளது. இந்தோ -சீனா நட்பு பொது வளர்ச்சிக்கு முக்கியம். சீனாவில் இந்தியா 400 மில்லியன் டாலரும், இந்தியாவில் சீனா 500 மில்லியன் டாலரும் முதலீடும் செய்துள்ளன. உலக பொருளாதார மந்தநிலையை இரு நாடுகளும் சமாளிக்கின்றன. இந்நாடுகள் இல்லாமல் உலகின் எந்த பிரச்னையும் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, என்றார். சங்க துணைத்தலைவர் பெர்னாண்டஸ், பேராசிரியர் ஜெயகாளை, வக்கீல் அன்னபிரகாஷ் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை: