ஞாயிறு, 25 டிசம்பர், 2011

Anna Hazare. மைதானமும், மீடியாவும் இல்லாமல் இவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாதா?

பல்வேறு கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே மக்களவையில் லோக்பால் மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மீடியா வழக்கம் போல இதை ஊதிப் பெரிசாக்கியது. தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் உள்ளே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்ற டைம் பாம் வைத்து லாலு திரியை கொளுத்த, நன்றாகவே வெடித்தது.
தமிழ் மேட்ரிமோனி டாட் காமில் வருவது போல எல்லோருக்கும் இடஒதுக்கீடு வழங்கிவிடலாம். ஊழல் பெருச்சாளிகளை விசாரிக்க எதற்கு இடஒதுகீடு தேவை? ஊழல் செய்த ராசாவை கலைஞர் தலித் அதனால் தான் எல்லோரும் அவரை டார்க்ட் செய்கிறார்கள் என்று ஜோக் அடித்தார்.
காங்கிரஸ் நாங்களும் ஜோக் அடிக்கிறோம் என்று 50% இடஒதுக்கீடு தேவை என்று சொல்லிவிட்டது. அவர்களுக்கு தேவை இந்த மசோதா நிறைவேறக்கூடாது அதே சமயம் சிறுபான்மையினருக்கு நாங்கள் நண்பேண்டா என்று கூற வேண்டும். ஓட்டு தேவை இல்லையா?

இந்தக் காமெடி பாராளுமன்றத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் போது அன்னா சும்மா இருப்பாரா? காங்கிரஸுக்கு போட்டியாக நானும் காமெடி செய்கிறேன் என்று மைதானத்தைக் குத்தகைக்கு எடுத்து உண்ணாவிரதம் இருக்கத் தயாராகிவிட்டார். 2G ஊழலுக்கு பின் தான் அன்னா பிறந்தாரா? அதற்கு முன் பீரங்கி ஊழல், லாலு செய்த உர ஊழல், சுடுகாடு ஊழல் எல்லாம் நடந்த போது எங்கே போனார் இவர்? இவர் குழுவில் உள்ள ஒருவர் நீதிமன்றம் போக...

ஒரே ஆறுதல் மும்பை நீதிமன்றம் இவருக்கு எதிராக கூறிய கருத்துக்கள் தான். உங்களுக்கும் (ஜெயமோகன் போன்றவர்களுக்கும்) அது சத்தியாகிரகமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்குத் தொல்லைதான் என்று சொல்லிவிட்டது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அதே நேரத்தில், மசோதா இன்னும் நிறைவேறவில்லை. அதில் என்ன அம்சங்கள் இடம்பெறப் போகிறது என்பதும் யாருக்கும் தெரியாது.அப்படி இருக்க எப்படிப் போராட்டம் நடத்தலாம்? உங்கள் போராட்டம் நாடாளுமன்ற நடவடிக்கையில் தலையிடுவதுபோல் இல்லையா? இவர்களுக்கு சேரும் கூட்டதின் பிரதிநிதிகள் தான் பாராளுமன்றத்தில் இதை விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சட்டம் வகுக்க தெரிந்தவர்களுக்கு இது கூட தெரியாதது வெட்கக்கேடு!

அன்னா குழுவினருக்கு கொஞ்சமாவது தலையில் மசாலா இருந்தால் நீதிமன்றம் கூறிய கருத்துக்குத் தலைவணங்கி பாராளுமன்றக் கூட்டம் முடிந்த பின் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது இல்லாததால் அன்னா "சிறையில் உண்ணாவிரதம் இருப்பேன். ஆசாத் மைதானத்தில் ஒரு லட்சம் பேருக்கு இடம் போதாது. எனவே, எம்எம்ஆர்டிஏ மைதானத்துக்கு வேண்டிய கட்டணத்தை செலுத்த, பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்‘‘ என்கிறார். அதுவும் கேஷ் என்றால் வேண்டாம், செக் என்றால் ஓகே என்கிறார்.

இவர் எதற்குக் கூட்டம் சேர்க்க வேண்டும்? மைதானமும், மீடியாவும் இல்லாமல் இவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாதா? மொத்தத்தில், குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலேயும், ரெண்டுமே மகாகாமெடி.
குளிர் அதிகம் என்பதால் ஹசாரேயின் உடல் நலம் காரணமாக தில்லி ராம்லீலா மைதானத்தில் அவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பது கிரன் பேடி சொன்ன தகவல்

கருத்துகள் இல்லை: