செவ்வாய், 27 டிசம்பர், 2011

கலைஞர்: Periyar is the Father of Tamilnadu.. Father of our DMK Government.

www.tamilpaper.net
மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, சைக்கிள் ரிக்ஷாக்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவரவேண்டும். முதலமைச்சர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளுள் இதுவும் ஒன்று. 3 ஜூன் 1973 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அதற்கான பணிகளைத் தொடங்கினார்.
என்னை வாழ்த்த வருபவர்கள் எனக்கு சால்வை போர்த்தவேண்டாம்; மாலை போடவேண்டாம். மாறாக, நிதி கொடுங்கள். அந்த நிதியைக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாக்கள் வாங்கப்படும். ஏழைத் தொழிலாளிகளுக்கு இலவசமாகத் தரப்படும். உதவுங்கள்.
தலைவரே கேட்டுவிட்டபிறகு தொண்டர்கள் வெறும் கையுடன் வந்துவிடுவார்களா என்ன? நிதி திரளத் தொடங்கியது. அதைக்கொண்டு முதல் கட்டமாக 301 சைக்கிள் ரிக்ஷாக்கள் வாங்கப்பட்டன. சொன்னபடியே ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்ஷா வாங்க விரும்புவர்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் கருணாநிதி. தங்களுடைய கை ரிக்ஷாக்களை அரசிடம் ஒப்படைத்தவர்களுக்கு நட்ட ஈடாக இருநூறு ரூபாய் தருவதற்கும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்தியாவில் பல மாநிலங்களிலும் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் கைரிக்ஷாக்கள் தமிழகத்தில் மட்டுமே நீக்கப்பட்டது. தொழிலாளர்களின் தோழர்களாக அறியப்பட்ட கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில்கூட கைரிக்ஷாக்கள் ஒழிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கைரிக்ஷா ஓட்டுனர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் விதமாக நடவடிக்கை எடுத்த பெருமிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி கிடைத்தது. அது, சுயமரியாதைத் தலைவர் பெரியாரின் மரணம்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் பெரியார், 24 டிசம்பர் 1973 அன்று மரணம் அடைந்தார்.
திமுக அரசே பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னவர் அண்ணா. அப்படிப்பட்ட பெரியாருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதைகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு வந்திருந்தது. உடனடியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசினார். அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பெரியாரின் உடலைப் பொதுமக்கள் பார்வையிட ராஜாஜி மண்டபத்தில் வைப்பதற்கு ஏற்பாடுசெய்யுங்கள். அவருடைய உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதைக் கேட்டதும் தமிழக தலைமைச் செயலாளர் சபாநாயகத்துக்கு ஆச்சரியம். கூடவே, கொஞ்சம் அதிர்ச்சி.
அய்யா எந்த அரசுப் பொறுப்பிலும் இருந்தவர் அல்ல; ஆகவே, அரசு மரியாதை செய்வது சட்டப்படி முடியாது என்று தயக்கம் காட்டினார் தலைமைச் செயலாளர்.
மகாத்மா காந்தி எந்தப் பதவியில் இருந்தார்? அவருக்கு அரசு மரியாதை செய்தார்களே.. அதைப்போல செய்ய வேண்டியதுதானே?
கருணாநிதி கேட்ட எதிர்க்கேள்விக்கு சட்டென்று பதில் வந்தது தலைமைச் செயலாளரிடம் இருந்து.
He is the Father of our Nation.
தலைமைச் செயலாளரின் பதிலுக்கு கருணாநிதியின் எதிர்வினை அதிரடியாக இருந்தது.
Periyar is the Father of Tamilnadu.. Father of our DMK Government.. இந்த மரியாதையை அவருக்குச் செய்வதன்மூலம் என்னுடைய பதவி போனாலும் பரவாயில்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்யுங்கள்.
முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பத்தின்படி அரசு மரியாதையுடன் பெரியாரின் இறுதிக்காரியங்கள் நடந்தன. கறுப்புக் கட்டமிட்ட தனி அரசிதழ் வெளியிடப்பட்டது.
பெரியாரின் இறுதிமரியாதையில் கலந்துகொண்ட பிறகு ஒரு முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அது, பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதம்.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவுசெய்துவிட்டோம். உங்களுக்குக் கருத்து ஏதும் இருக்கிறதா? இதுதான் இந்திரா தலைமையிலான மத்திய அரசு, தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்.
தமிழக மீனவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் முடிவு என்பது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமல்ல; காமராஜருக்குத் தெரியும்; முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்துக்குத் தெரியும்.தமிழகத்தின் இன்னபிற அரசியல் தலைவர்கள் அத்தனை பேருக்குமே தெரியும். இத்தனை பேருக்குத் தெரிந்த சங்கதி இந்தியாவை ஆளும் பிரதமர் இந்திரா காந்திக்குத் தெரியாதா என்ன? தெரியும். இருந்தும் அந்த முடிவுக்கு அவர் வந்திருந்தார். பதில் சொல்லியே ஆகவேண்டும்.
உடனடியாக அமைச்சர் செ. மாதவன் சகிதம் டெல்லி புறப்பட்டார். கைவசம் பல கோப்புகளை எடுத்துச்சென்றார். அத்தனையும் ஆதாரங்கள். கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். இந்தியாவின் நிலப்பகுதி என்பதற்கான ஆதாரங்கள். முக்கியமாக, இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார் கருணாநிதி.
ராமநாதபுரம் அரசர் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றிய ஜமீன் நிர்வாகப் பதிவேடுகளைப் பிரதமரிடம் காட்டினார். கைவசம் கொண்டுவந்திருந்த ஆதாரங்களைக் காட்டி விளக்கினார். தமிழக மீனவர்களின் வாழ்க்கை பற்றிப் பேசினார். அனைத்துக்கும் நோக்கம் ஒன்றுதான். கச்சத்தீவு தாரை வார்க்கப்படக்கூடாது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்துவிடக்கூடாது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார் பிரதமர் இந்திரா. விடைபெற்றார் கருணாநிதி.
சந்திப்பு மட்டுமே பலன் தராது என்று நினைத்தார் கருணாநிதி. தமிழகம் திரும்பியதும் கச்சத்தீவு தொடர்பான தமிழக அரசின் கருத்தை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.
முதல் அம்சம், கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் ஆராய்ந்து பார்த்தால் பலவிஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை.
இரண்டாவது அம்சம், கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியதுகூட இல்லை.
ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி ‘கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமல்ல‘ என்று நிரூபிக்க முடியும் என்பதுதான் கருணாநிதி முன்வைத்த வாதம்.
கருணாநிதி அனுப்பிய கடிதத்தை வாங்கிவைத்துக் கொண்ட இந்திரா காந்தி, அடுத்தடுத்த காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினார். ஆம். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கத் தயாராகியிருந்தார் இந்திரா. ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஷரத்தும் நுணுக்கமாகத் தயார் செய்யப்பட்டது.
26 ஜூன் 1974 அன்று இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் பிரதமர் இந்திராவும் இலங்கை சார்பில் சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்து போட்டனர். ஆம். கச்சத்தீவு தாரை வார்ப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதையும் இதில் மாநில முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை, கருத்து சொல்வதைத் தவிர என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார் பிரதமர் இந்திரா காந்தி.
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: