வியாழன், 29 டிசம்பர், 2011

சென்னை, புதுவையை வேகமாக நெருங்கும் தானே புயல்-நாளை கரையைக் கடக்கிறது!

சென்னை: தானே புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயலானது, இரு நகரங்களிலிருந்தும் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
புயல் நெருங்கியதைத் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல்-'லேட்டஸ்ட்' எச்சரிக்கை:
இன்று மாலை 4. 30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் புயல் தகவல்:
மிகத் தீவிர புயலான தானே, இன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி வங்கக் கடலின் தென் மேற்கில், சென்னை மற்றும் புதுவையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழக கடல் பகுதியில், நாகைக்கும், சென்னைக்கும் இடையே, புதுச்சேரி அருகே நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும். புயல் கரையை நெருங்கும்போது அது பலவீனமடைந்து விடும்.

பல புயல்களை தமிழக கடலோர மக்கள் பார்த்துள்ள நிலையிலும் இந்த சீசனில் வந்துள்ள முதல் புயலே படு தீவிரமாக இருப்பதாக கூறப்படுவதால் மக்களிடையே ஒருவிதமான அச்ச நிலை காணப்படுகிறது.

புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை நகரில் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய பல பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. அதேபோல புதுச்சேரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

நாகையில் விடுமுறை
புயல் நாகையைத் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: