புதன், 28 டிசம்பர், 2011

இனி கேரளஅதிகாரிகள் வாயைத் திறக்கக் கூடாது’

கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு மேலாக போராட்டம், கடையடைப்பு, பேரணி, வன்முறை என கசிந்துகொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையின் விரிசல் ஒரு வழியாக சாத்வீக வழியில் அடைபட்டுக்கொண்டு இருக்கிறது.
‘அணை பலவீனமாகிவிட்டது, வேண்டும் புது அணை’ என கேரளாவும், ‘அணை பலமாகவே இருக்கிறது, தேவையில்லை புது அணை’ என தமிழகமும் வலியுறுத்திய நிலையில்தான் இந்தப் போராட்டம் தீப்பற்றி எழுந்தது. இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இதில் கேரள சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஏ.ஆர்.லட்சுமணன், மத்திய நீர் வளத்துறைச் செயலாளர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 23-ம் தேதி தொழில்நுட்ப வல்லுநர்களான சி.டி.தத்தேவும் டி.கே.மேத்தாவும் இடுக்கி அணை மற்றும் கொளமாவு, செருதோணி அணைகளையும் பரிசோதித்தனர். 24-ம் தேதி தேக்கடிக்கு வந்து முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்தக் குழுவில் கேரளாவின் தலைமைப் பொறியாளர் லத்திகா மற்றும் அதிகாரிகளும் தமிழகத்தின் தலைமை முதன்மைப் பொறியாளர் ராஜகோபால் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்களுடன் பேசினோம்.
‘‘அணைப் பகுதி மற்றும் மதகு, பேபி அணை, அதன் அருகில் உள்ள எர்த் டேம் ஆகியவற்றை முதலில் பார்வையிட்டனர். தொடர்ந்து, தற்போது அணையின் நீர்மட்டம் எவ்வளவு உள்ளது, 142 அடி உயர்ந்தால் எந்தளவிற்கு வரும் என்று ஒரு அடையாளக் கோடு போட்டுவையுங்கள் என்று சி.டி.தத்தா கூறியதும், தமிழக அதிகாரிகள் அடையாளத்தைக் காட்டினர். மேலும், தற்போது அணையின் நீர்மட்டம் 128.6 அடி உள்ளது என துல்லியமாக கணக்கிட்டு கூறியுள்ளார்.
கேரளாவின் தலைமைப் பொறியாளர் லத்திகா, ‘16, 17 வது பிளாக்கில் நீர்க் கசிவு இருக்கிறது. பாருங்கள்’ எனச் சொன்னார். அதிகாரிகள் பார்க்க மறுத்துவிட்டனர். உடனே லத்திகா, ‘கேலரி பகுதியில் நீர்க் கசிவு இருக்கிறது. அதையாவது பாருங்கள்... அதிர்வுகளால் இந்தப் பகுதிதான் சேதப்பட்டுள்ளது’ என மீண்டும் சொல்ல, ‘கீப் கொய்ட் லத்திகா... நீங்க எங்களுக்கு உத்தரவு போடக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இத்தனை பேர் இருந்தும் ஒருவர் மட்டும் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார். நீங்கள் அப்படி இல்லை. ஆளாளுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருகிறீர்கள். இனி கேரளஅதிகாரிகள் வாயைத் திறக்கக் கூடாது’ என்று டி.கே.மேத்தா கடுப்படித்தார்’’ என்றார்கள், நமது அதிகாரிகள்.

இந்தக் குழுவின் வருகைக்குப் பிறகு ஓரளவுக்கு சகஜமான நிலைக்கு வந்திருக்கிறது குமுளி மற்றும் தேனி மாவட்டப் பகுதிகள். கடந்த 20 நாட்களாக நிறுத்தி வைக்கப்ப ட்ட போக்குவரத்தும் கூடலூர், லோயர் கேம்ப் என தொடங்கியிருக்கிறது. இதனால் இரு மாநிலப் பயணிகள், சபரிமலை பக்தர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
எப்படியோ அமைதி நிலவட்டும்!
இரா, முருகேசன்
thanks kumudam + maharajan erode

கருத்துகள் இல்லை: